டெல்லி கற்பழிப்பு வழக்கு: குற்றவாளிகளில் இருவர் பஸ்ஸில் இல்லை என்று காட்டும் வீடியோ
டெல்லி: டெல்லியில் பிஸியோதெரபி மாணவியை கற்பழித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள 6 பேரில் 2 பேர் சம்பவம் நடந்தபோது இசை நிகழ்ச்சியில் இருந்ததாக 15 வயது சிறுவன் ஒருவர் நீதிமன்றத்தில் வீடியோ ஆதாரத்தை அளித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் 16ம் தேதி டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது பிஸியோதெரபி மாணவி 1 மைனர் உள்பட 6 பேரால் கற்பழிக்கப்பட்டு தாக்கப்பட்டதில் பலியானார். இந்த வழக்கில் பேருந்து ஓட்டுனர் ராம் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய், முகேஷ் மற்றும் மைனர் ஆகிய 6 பேரும் கைது செய்யப்பட்டனர். இதில் ராம் சிங் கடந்த மார்ச் மாதம் 11ம் தேதி திகார் சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையின்போது 15 வயது சிறுவன் ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜராகி வீடியோ ஆதாரம் ஒன்றை சமர்பித்தார். அந்த வீடியோவின்படி குற்றவாளிகளில் வினய் சர்மா மற்றும் பவன் குப்தா ஆகியோர் சம்பவம் நடந்தபோது பேருந்தில் இல்லை என்றும், அப்போது அவர்கள் தெற்கு டெல்லியில் நடந்த இசை நிகழ்ச்சியில் இருந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சிறுவன் போலியான ஆதாரங்களை தயார் செய்து சமர்பித்துள்ளதாக அரசின் சிறப்பு வழக்கறிஞர் தயான் கிருஷ்ணன் தெரிவித்தார். ஆனால் சிறுவனோ தான் பொய் சொல்லவில்லை என்றும், இது கடவுள் மீது சத்தியமாக உண்மை என்றும் தெரிவித்தார்.
தெற்கு டெல்லியில் உள்ள பார்க்கில் கடந்த ஆண்டு டிசம்பர் 16ம் தேதி மாலை எந்த இசை நிகழ்ச்சியும் நடக்கவில்லை என்றும், இரவு 7 மணிக்கு மேல் பார்க்கில் இருக்க யாருக்கும் அனுமதி இல்லை என்றும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
அந்த பார்க்கில் சம்பவம் நடந்த அன்று எந்த இசை நிகழ்ச்சியும் நடக்கவில்லை என்பதை நிரூபிக்க 3 பேரை விசாரிக்க போலீசார் அனுமதி கோரியுள்ளனர்.












Click it and Unblock the Notifications