''கண் அசையுது.. கால் அசையுது.. நாகராஜ் இன்னும் சாகலை''... அமைச்சர் செய்த களேபரம்!

ஆனால் உண்மையில் அந்தப் பிரமுகர் இறந்து பல மணி நேரமாகி விட்டிருந்ததால், அமைச்சர் பேச்சால் இறந்தவர் வீட்டுக்கு வந்திருந்தவர்கள் டென்ஷனாகி விட்டார்கள்.
ராஜபாளையம் நகராட்சியின் 15வது வார்டு அதிமுக கவுன்சிலர் நாகராஜ்.அவருக்கு உடல் நலம் இல்லாமல் சீரியஸான நிலையில் டாக்டர் கோவிந்தராஜிடம் கொண்டு போயுள்ளனர். அவர் நாகராஜைப் பரிசோதித்து விட்டு பல்ஸ் சுத்தமாக இல்லை, வீட்டுக்குக் கொண்டு போய் விடுங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து நாகராஜை வீட்டுக்குக் கூட்டி வந்துள்ளனர். அங்கு அவர் இறந்துள்ளார்.
இதையடுத்து ஐஸ் பெட்டிக்குள் வைக்கப்பட்ட உடலை வீட்டில் அஞ்சலிக்காக வைத்தனர். பலரும் வந்து அஞ்சலி செலுத்தினர். அதேபோல அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் வந்தார். வந்தவர் மாலை போட்டபோது, திடீரென நாகராஜ் இன்னும் சாகல. கண் அசையுது. கால் அசையுது என்று கூற உடனே பரபரப்பாகி விட்டது நாகராஜின் வீடு.
உடனடியாக நாகராஜ் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்ப உத்தரவிட்டார் அமைச்சர். உறவினர்களும் தூக்கிக் கொண்டு ஓடினர். அங்கு பணியில் இருந்த டாக்டர் பொன்னுச்சாமி, ஒரு மணி நேரத்திற்கு முன்புதான் இறந்துள்ளார். முன்பே கொண்டு வந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாமே என்று கூற அவ்வளவுதான் உறவினர்கள் டென்ஷனாகி விட்டனர்.
டாக்டர் கோவிந்தராஜ் மீது கோபம் கொண்டு அவரைத் தேடிப் போனார்கள். அவரிடம் ஆவேசமாக பேசியுள்ளனர். அதை கேட்ட டாக்டர் கோவிந்தராஜ், ,அமைதியாக, பல்ஸ் சுத்தமா இல்லை. உயிர் போவதற்கு முன்பு வீட்டுக்கு கொண்டு போயிருங்கன்னு சொன்னேன். அவர் உங்கள் வீட்டில் வைத்துதான் இறந்துள்ளார். நீங்கதானே உடம்பை குளிப்பாட்டி ஐஸ் பெட்டிக்குள்ள வச்சிருக்கீங்க.. இப்ப என்னை குற்றம் சொன்னா எப்படி என்று நறுக்கென கேட்டார்.
இதற்குப் பதில் சொல்ல முடியாமல் தவித்த உறவினர்கள் பேசாமல திரும்பிப் போய் விட்டனர்.
பாவம், அமைச்சர் அவராகவே கன்பியூஸ் ஆகிட்டார் போல...!












Click it and Unblock the Notifications