அப்பப்ப மழை.. சிலுசிலுன்னு காத்து.. கொஞ்சம் போல வெயில்.. நல்லாருக்குங்க சென்னை!
சென்னை: அவ்வப்போது சின்னதாக மழை.. சிலுசிலுவென்று வீசும் காற்று.. கூடவே வெயில்... என வித்தியாசமான சூழலில் காட்சி தருகிறது சென்னை மாநகரம்.
வெயில் காலம் போலவும் இல்லாமல், மழைக் காலமாகவும் இல்லாமல்.. அவ்வப்போது மழையும், வெயிலுமாக இருப்பதால் மக்களுக்குப் பெரிய மண்டையிடி இல்லாத நிலை இப்போது.
தென் மேற்குப் பருவ மழைக் காலம் கிட்டத்தட்ட பாதி முடிந்து விட்டது. இதுவரை தமிழகத்திற்கு இதனால் போதிய அளவு மழை கிடைக்கவில்லை.
சென்னையில் அவ்வப்போது மழை
இருப்பினும் சென்னையில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் கடுமையான வெப்பத்தின் தாக்கத்திலிருந்து மக்கள் ஓஹோவென தப்பியுள்ளனர்.
திடீர்னு வருது.. திடீர்னு போகுது
மழை எப்போது வரும் என்று சொல்ல முடியவில்லை. திடீரென்று மாலையில் பெய்யும். அல்லது திடீரென்று இரவு முழுக்க வெளுத்துக் கட்டும். சில நேரங்களில் மத்தியானத்திலேயே வந்து போய் விடும்... அது இஷ்டம்தான்.
இப்பெல்லாம் காற்றும் கூடவே
இப்போது ஆடி மாதம் என்பதால் காற்றும் கூடவே பட்டையைக் கிளப்பி வருகிறது. ஆளைத் தூக்கும் அளவுக்கு இந்த காற்று இல்லை என்றாலும் கண்களில் மண்ணை அள்ளிப் போடத் தவறுவதில்லை.. இதனால் டூவீலரில் போவோர் அழுதபடியே போவதைப் பார்க்க முடிகிறது.
ஆகஸ்ட் மாதத்தில் பெரிய்யய மழை வருமாம்
ஆகஸ்ட் மாதத்தில்தான் பெரிய அளவிலான மழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜூன் 1 முதல் ஜூலை 24 வரை 186.1 மில்லி
ஜன் 1ம் தேதி தொடங்கி ஜூலை 24ம் தேதி வரையிலான காலகட்டத்தில் சென்னை 186.1 மில்லி மீட்டர் மழையைப் பெற்றுள்ளது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் 145.8 மில்லிமீட்டர் மழையெ பெய்யும் தற்போது 28 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது.
ஆனால் ஒட்டுமொத்தமாக 11 சதவீதம் குறைவு
அதேசமயம், தமிழகத்தை எடுத்துக் கொண்டால் இந்த ஆண்டு 11 சதவீதம் குறைவான மழையே பெய்துள்ளது. வழக்கமாக 99.8 மில்லிமீட்டர் மழை பெய்யும். இந்த முறை 88.8 சதவீதமே பெய்துள்ளது.