பண்ருட்டி அருகே நகைக்கடை பூட்டை உடைத்து 100 பவுன் நகை..6 கிலோ வெள்ளி கொள்ளை
கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நகைகடையின் பூட்டை உடைத்து நூறு பவுன் நகை, 6 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லிக்குப்பம் அருகே நடுவீரப்பட்டு மெயின் ரோட்டை சேர்ந்தவர் வைத்தியநாதன் (வயது 69). இவர் வீட்டின் அருகிலேயே நகை கடை மற்றும் துணிக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு 9 மணிக்கு வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும் நகை கடை மற்றும் ஜவுளிக்கடையை வைத்தியநாதன் பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இன்று அதிகாலை 5.30 மணியளவில் வைத்தியநாதனின் மனைவி பிரபாவதி கடை வாசலை சுத்தம் செய்ய சென்றபோது அப்போது நகை கடையின் ஷெட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு திடுக்கிட்டார். உடனடியாக தனது கணவர் இதனை வைத்தியநாதனிடம் தெரிவித்தார்.
அவர் நகை கடையை திறந்து பார்த்த போது கடையில் வைக்கப்பட்டிருந்த 80 பவுன் தங்க நகை மற்றும் 6 கிலோ வெள்ளி பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து வைத்தியநாதன் நடுவீரப்பட்டு போலீசில் புகார் செய்தார்.
இதைத்தொடர்ந்து நெல்லிக்குப்பம் காவல்நிலைய போலீசாரும், நடுவீரப்பட்டு காவல்நிலைய போலீசாரும் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் போலீஸ் மோப்ப நாய் புரூனோவை வரவழைத்தனர். ஆனால் மோப்ப நாய் சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதையடுத்து தடயவியல் நிபுணர்களையும் வரவழைத்தனர். அவர்கள் தடயங்களை பதிவு செய்தனர்.
கொள்ளைபோன நகைகளின் மொத்த மதிப்பு ரூ. 20 லட்சமாகும். கொள்ளை நடந்த இடம் எப்போதும் மக்கள் நடமாட்டமுள்ள பகுதியாகும். இந்த சம்பவத்தினால் அப்பகுதி வியாபாரிகள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications