முதல்வர் விஜய்யின் முதன்மைச் செயலாளராக பி.செந்தில் குமார் நியமனம்! உமாநாத் விடுவிப்பு!
சென்னை: தமிழக முதல்வராக பதவியேற்ற முதல்வரின் முதன்மைச் செயலாளராக பி.செந்தில் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு சுகாதாரத் துறை செயலாளராக இருந்தார்.
முதல்வராக விஜய் பதவியேற்ற நிலையில் முதல்வரின் தனிச் செயலாளர் 1, 2 ஆகிய இருபதவிகளுக்கான அதிகாரிகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். தனிச் செயலாளர் 1 அல்லது முதன்மை செயலாளராக செந்தில் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மருத்துவத் துறை செயலாளராக இருந்தவர்.

அது போல் முதல்வரின் தனிச் செயலாளர் 2-வாக ஜி. லட்சுமி பிரியா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆதிதிராவிடநலத் துறை செயலாளராக இருந்தவர்.
பொதுவாக முதல்வருக்கு 1, 2, 3 என 3 தனிச் செயலாளர்கள் நியமிக்கப்படுவார்கள். தற்போது இரு செயலாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் செயலாளர் - 3 பிறகு நியமிக்கப்படுவார் என தெரிகிறது.
முதல்வராக ஸ்டாலின் இருந்த போது முதல்வரின் தனிச் செயலாளராக உதயசந்திரன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். அதன் பிறகு செயலாளர் -2 ஆக சண்முகமும், செயலாளர் - 3 ஆக அனு ஜார்ஜும் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
இதில் 2024 ஆம் ஆண்டு உதயசந்திரன் நிதித் துறைக்கு மாற்றப்பட்டதால் அவருக்கு பதிலாக உமாநாத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார்.
முதல்வரின் தனிச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு துறைகளும் ஒதுக்கீடு செய்யப்படும். இந்த 3 தனிச் செயலாளர்களுடன் ஒரு இணைச் செயலாளரும் நியமிக்கப்படுவார்.
அந்த வகையில் உமாநாத்திற்கு பதிலாக செந்தில் குமாரும், சண்முகத்திற்கு பதிலாக லட்சுமி பிரியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் பதவியேற்றதில் இருந்து ஓராண்டுக்கு பதவியில் இவர்களுக்கான துறைகள் பின்னர் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிகிறது.
தமிழகத்தின் 13 ஆவது முதல்வராக பதவியேற்ற விஜய், நேரு ஸ்டேடியத்தில் இருந்து நேராக தலைமைச் செயலகத்திற்கு வந்தார். அங்கு அவருக்கு காவல் துறை மரியாதை அளிக்கப்பட்டது. இதையடுத்து முதல்வர் அறைக்குச் சென்ற விஜய், அங்கு முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார்.
முன்னதாக நாற்காலியில் அமருமாறு செங்கோட்டையன் கூறியிருந்த நிலையில் விஜய் அந்த சீட்டை பார்த்ததும் வெட்கத்துடனும் ஆச்சரியத்துடனும் சிரித்தபடியே அமர்ந்தார்.
அவரை தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஐஏஎஸ் அதிகாரிகள், முதல்வர் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும் தங்களை அறிமுகம் செய்து கொள்கிறார்கள். அது போல் ஐபிஎஸ் அதிகாரிகளும் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
இன்று 12 - 1.30 மணிக்கு எமகண்டம் என்பதால் அதற்குள் முதல்வர் சீட்டில் விஜய் அமர்ந்துவிட்டார். விஜய் முதல்வரான நிலையில் தமிழகம் முழுவதும் கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications