உள்ளாடையில் ஒளித்து ரூ 2.5 கோடி வைரநகைகளைக் கடத்திய சிங்கப்பூர் பெண் தொழிலதிபர் கைது
மும்பை: சிங்கப்பூரில் நகைக்கடை நடத்தி வரும் பெண் தொழிலதிபர் ஒருவர் உள்ளாடைக்குள் மறைத்து சுமார் இரண்டரை கோடி ரூபாய் மதிப்புள்ள வைர நகைகளை எடுத்து வந்த போது பிடிபட்டார். போலீசாரால் கைது செய்யப்பட்ட அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.
மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் மற்றும் கண்காணிப்பு இயக்குநரக அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில், சிங்கப்பூரிலிருந்து மும்பை வந்த விமானத்தில் வந்திறங்கிய பெண் பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரை சோதனை செய்த போது, அவர் உள்ளாடைக்குள் ரூ 2.5 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் பிடிபட்டன்.
விசாரணையில் அவர் சிங்கப்பூரைச் சேர்ந்த நகைக்கடை பெண் தொழிலதிபர் விஹாரி போடார் என்பதும் அவருடைய கணவர் அபிஷேக் போடார் பிரபல ஜவுளி நிறுவன அதிபர் என்பதும் தெரிய வந்தது. ஏற்கனவே, இது போன்று உள்ளாடைகளில் மறைத்து 10க்கும் மேற்பட்ட முறை இவர் நகைகள் கடத்தியது விசாரணாஇயில் உறுதியானது.
விஹாரி போடாருக்கு மும்பை சாந்தாகுரூசில் நகைக்கடைகள் உள்ளன. அந்த கடைகளுக்காக சிங்கப்பூரில் இருந்து நகைகளை கடத்தி வந்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து அவரது நகைக்கடைகளில் சோதனை நடத்தப்பட்டதில், கணக்கில் வராத ரூ4 கோடி மதிப்பிளான நகைகள் போலீசாரால் கைப்பற்றப் பட்டன.
விசாரணைக்குப் பின்னர் விஹாரி போடார் மும்பை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவருக்கு ஜாமீன் மறுக்கப் பட்டது. மேலும், தலைமறைவாக உள்ள அவரது கணவரைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.