நீடிக்கும் கனமழை... குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: குளிக்க தடை
குற்றாலம்: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை நீடிப்பதையடுத்து குற்றால அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால் சுற்றுலாபயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 1ம் தேதி தொடங்கிய சீசன் இன்னமும் நீடிக்கிறது. கடந்த 60 நாட்களுக்கும் மேலாக அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்துக் கொட்டுவதால் சுற்றுலா பயணிகளும், உள்ளூர் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மழையில்லாமல் இருந்து வந்தது. இதனால் குற்றால அருவிகளில் தண்ணீர்வரத்து படிப்படியாக குறைந்த போதும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
ஆடிப் பெருக்கு கூட்டம்
ஆடிப்பெருக்கினை தொடர்ந்துஅருவிகளுக்கு குளிக்க வரும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் குறைவாக இருக்கும் என்ற போதிலும் அருவிகளிலும் படிப்படியாக தண்ணீர்வரத்து குறையும் என கூறப்படுவதுண்டு. பெருமளவில் மழை பெய்தால் தான் அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் விழுவதை காண முடியும்.
சுமாராகவே விழுந்த தண்ணீர்
இதனிடையில் நேற்று காலை முதல் குற்றாலத்தில் பரவலாக வெயில் காணப்பட்ட போதிலும் அருவிகளில் தண்ணீர் சுமாராகவே விழுந்தது.
மலைப் பகுதியில் திடீர் மழை
திடீரென நேற்று மாலை முதல் வானம் மப்பும்,மந்தாரமுமாக காணப்பட்டதுடன் குளிர்ந்த காற்றும் தொடர்ந்து வீசிய நிலையில் மலைப்பகுதியில் மழை கொட்டியதை அடுத்து மெயின் அருவியில் கடந்த 60 நாட்களில் 18 வது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டது. தொடர்ந்து வனப் பகுதியில் மழை பெய்து வருவதால் குற்றாலம் மெயின் அருவி,ஐந்து அருவிகளில் வெள்ளப் பெருக்கு தற்ப்போது வரை நீடித்து வருகிறது. தொடர்ந்து சீசன் இருப்பதால் அனைத்து மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் கனமழை
குமரி மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை ஜுன் 1-ந் தேதி பெய்யத் தொடங்கியது. 1 மாதமாக விடாமல் பெய்த மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில் கடந்த 3 நாட்களாக மீண்டும் பரவலாக பெய்தது. நேற்று காலையில் இருந்தே மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்தாலும் இரவில் வெளுத்து வாங்கியது.
விடிய விடிய மழை
திருவட்டார், பூதப்பாண்டி, குளச்சல், இரணியல், பெருஞ் சாணி பகுதிகளில் விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது. அதிகபட்சமாக திருவட்டாரில் 112 மில்லி மீட்டர்(11.2 சென்டி மீட்டர்) மழை பதிவானது.
பல மடங்கு அதிகரிப்பு
கனமழையால் அணைகளுக்கு வரும் நீர்வரத்து நேற்றைய அளவைவிட பலமடங்கு அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணை நீர் மட்டும் 25 அடியில் இருந்து 1 அடிக்கும் மேல் அதிகரித்து இன்று 26.15 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று 174 கனஅடி மட்டும் வந்து கொண்டிருந்த நீர்உள்வரத்து இன்று 1279 கனஅடியாக உயர்ந்தது.
நீர்மட்டம் உயர்வு
அணையில் இருந்து 117 கனஅடி நீர்மட்டுமே வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர் மட்டம் 63.60 அடியில் இருந்து 64.40 அடியாக அதிகரித்தது. அணைக்கு நேற்று 301 கன அடி நீர் மட்டுமே வந்தது. இன்று 1070 கனஅடிநீர் வந்து கொண்டிருக்கிறது.
கரைபுரண்டோடும் வெள்ளம்
தொடர்ந்து பெய்து வரும் மழையால் கீரிப்பாறை, காளி கேசம், மாறாமலை உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றுவெள்ளம் கரைபுரண்டோடுகிறது. மேலும், கனமழை காரணமாக மார்த்தாண்டம், குலசேகரம், பொன்மனை, அருமனை, திருவட்டார் உள்ளிட்ட பகுதிகளில் ரப்பர் பால் வெட்டும் பணிகள் முடங்கி உள்ளது. இதுபோல, ஆற்றூர், தேமானூர், ஞாறாம்விளை, தச்சன் விளாகம், தோவாளை, ஆரல் வாய்மொழி பகுதிகளில் செங்கல் சூளை தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இன்றும் குடை பிடித்தபடி
இன்று காலையும் நாகர் கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் மாணவ, மாணவிகள் குடைபிடித்தபடி பள்ளிக்குச் சென்றனர்.