'சுட்ட' நிலத்தைத் திருப்பித் தருவதாக தம்பித்துரை கோர்ட்டில் வாக்குறுதி!
சென்னை: சென்னை அருகே தான் ஆக்கிரமித்துள்ள நிலத்தை நில உரிமையாளர்களிடமே திருப்பித் தந்து விடுவதாக அதிமுக எம்.பி. தம்பித்துரை கோர்ட்டில் உறுதியளித்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த உமா பிரசாத் மற்றம் சலீம் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.
அதில், அதிமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் தம்பித்துரைக்கு சொந்தமான கல்லூரி ஆவடிக்கு அருகே செயல்பட்டு வருகிறது. அந்தக் கல்லூரிக்கு அருகே உள்ள இடங்களை தம்பித்துரை தரப்பினர் மிரட்டி குறைந்த விலைக்கு வாங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தங்களுடைய நிலங்களை விற்கும்படி மிரட்டல் விடுத்தனர்.
ஆனால், நிலத்தை விற்காததால், தங்கள் நிலத்திற்கு போகும் வழியை ஆக்கிரமித்து, சுவர்களை எழுப்பி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறியிருந்தனர்.
இந்த மனுவை நீதிபதி சுசீந்திரன் விசாரித்தார். அப்போது தம்பித்துரை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை உரிமையாளரிடமே திருப்பித் தந்து விடுவதாக உறுதி அளித்தார்.இதை ஏற்ற நீதிபதி, இந்த உறுதிமொழியை பதிவு செய்து கொள்ளுமாறு கோர்ட்டுக்கு உத்தரவிட்டார்.