தனியார் பஸ் கார் மீது மோதி 3 பேர் பலி
மதுரை: மதுரையில் கார் மீது தனியார் பேருந்து மோதியதில் காரில் பயணித்த 3 பேர் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. 67 வயதான இவர் ஒரு ஜவுளி வியாபாரி ஆவார். இவரது மனைவி பெயர் தனபதி. இவருக்கு 63 வயதாகிறது. இவர்களது உறவினர் ஒருவர் வெளிநாடு செல்கிறார். இதற்காக அவரை வழியனுப்புவதற்காக காரில் சென்னைக்குப் புறப்பட்டனர்.
இவர்களுடன் பேத்தி பிரியாஜா, பேரன் பிரதீப் ஆகியோரும் சென்றனர். விஜயக்குமார் காரை ஓட்டினார். கார் இன்று காலை, மேலூர் அருகே பை பாஸ் சாலையில் வந்தபோது எதிர்திசையில் மாட்டுத்தாவணி பஸ் நிலையம் நோக்கி வந்த தனியார் பேருந்து கார் மீது மோதியது.
இதில் கார் அப்படியே நொறுங்கிப் போனது. அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மீட்புப் பணிகளில் இறங்கினர். போலீஸாரும் விரைந்து வந்தனர்.
இந்த கோர விபத்தில் மாரிமுத்து, தனபதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேத்தி பிரியாஜா மருத்துவமனைக்குக் கொண்டு போகும் வழியில் உயிரிழந்தார். மற்ற இருவரும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications