திருச்சியில் 13 வயது மாணவி பலாத்காரம் செய்து கொலை?... பதற்றம்
திருச்சி: திருச்சியில் ரயில் தண்டவாளத்தில் 13 வயதான மாணவி ஒருவர் உடல் சிதறி பிணமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரை பாலியல் பலாத்காரம் செய்து தண்டவாளத்தில் உடலைப் போட்டிருக்கலாம் என்று பரபரப்புக் கிளம்பியுள்ளால் திருச்சியில் பதற்றம் உருவாகியுள்ளது.
திருச்சி, காஜாமலையைச் சேர்ந்தவர் அக்பர் பாஷா. இவரது மகள் தவ்ஹீத் சுல்தானா (13). பாஷா வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். மேலபுதூரில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார் சுல்தானா.
நேற்று சுதந்திர தினத்தையொட்டி கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பள்ளிக்குப் போயிருந்தார் சுல்தானா. ஆனால் வீடு திரும்பவில்லை. இதையடுத்த சுல்தானாவின் குடும்பத்தினர் தேடிப் பார்த்தனர். பின்னர் பாலக்கரை போலீஸில் புகார் கொடுத்தனர்.
மாணவி மரணம்
இந்தநிலையில்தான் எடமலைப்பட்டி, புத்தூர் அருகே தண்டவாளத்தில் சுல்தானாவின் உடல் கிடந்தது. துண்டாகிக் கிடந்தது உடல். இதையடுத்து சுல்தானாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தார் கூறினர். மேலும் இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்துமாறும் காவல்துறைக்குக் கோரிக்கை விடப்பட்டது.
பெற்றோர் மறுப்பு
மாணவியின் இடுப்புக்கு கீழே இருக்கும் பாகங்கள் அனைத்தும் சிதைந்துள்ளன. மேலும், சில முக்கிய உறுப்புகளும் காணவில்லை. மாணவியின் உடலில் இருந்து காணாமல் போன பாகங்கள் கிடைக்கும் வரை உடலை மருத்துவமனையில் இருந்து வாங்க அவரது பெற்றோர் மறுத்துவிட்டனர்.
இதையடுத்து, காணாமல் போன கை முதலான பாகங்களை தேட போலீசார் விரைந்தனர். மேலும் 24 மணி நேரத்துக்குள் குற்றவாளியை கண்டுபிடிப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
சுல்தானாவை கடந்த சில நாட்களாகவே யாரோ சிலர் பின் தொடர்ந்து வந்தனராம். இதுகுறித்து சக மாணவிகள் சுல்தானாவின் குடும்பத்தாரிடமும், போலீஸாரிடமும் கூறியுள்ளனர்.
தமுமுக தலையீடு
இதையடுத்து தற்போது தமுமுகவினர் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளனர். தமுமுக தவிர வேறு சில முஸ்லீம் அமைப்புகளும் சுல்தானாவின் மரணம் குறித்து போலீஸார் நியாயமாக, நேர்மையாக விசாரணை நடத்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
போலீஸ் திணறல்
இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதி அடங்கியுள்ள மாவட்டம் திருச்சி. ஆனால் இங்கு போலீஸாரின் நடவடிக்கை சரியில்லை. ராமஜெயம் கொலை முதல், இந்த மாணவியின் கொலை வரை இன்னும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறுகிறது.
சிபிசிஐடி விசாரணை
இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைக்க வேண்டும். இதை தற்கொலையாக மாற்றி வழக்கை முடிக்க நினைக்கிறது காவல்துறை. அதற்கு இடம் கொடுக்க மாட்டோம் என்றனர்.
மாணவி சுல்தானாவின் மரணத்தால் திருச்சியில் பதட்டம் நீடிப்பதால் தேவையான இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications