தெலுங்கானாவால் சந்திரபாபு, சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா தேர்தலில் போட்டியிட முடியுமா? புது சிக்கல்!!
ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநிலம் உதயமாவதால் சந்திரபாபு நாயுடு, சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
ஆந்திராவை பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துவிட்டது. ஆனால் கடந்த ஒரு மாத காலமாக தெலுங்கானாவுக்கு எதிராக கடலோர ஆந்திர, ராயலசீமா பகுதிகளில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஆந்திர அரசியலில் புதிய பரபரப்பு எழுந்துள்ளது. ஹைதராபாத் தெலுங்கானாவுக்கு சொந்தம் என்பதால் ஹைதராபாத் முகவரியில் வசிக்கும் பல அரசியல் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரசியல் சாசனம் சொல்வது என்ன?
ஒரு நபர் சட்டசபை தேர்தலில் போட்டியிட வேண்டும் எனில் அந்நபர் அந்த மாநிலத்தின் வாக்காளராக இருக்க வேண்டும் என்கிறது அரசியல் சாசனம்
சந்திரபாபு, சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா
ஆனால் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர் சிரஞ்சீவி, நடிகர் பாலகிருஷ்ணா உள்ளிட்ட பலரது பெயர் தெலுங்கானாவுக்கு சொந்தமான ஹைதராபாத்தில் இருக்கிறது. இதனால் இவர்கள் சீமாந்திரா மாநிலத்தில் போட்டியிட முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஹைதரபாத்தில் செட்டில் ஆன சீமாந்திரா பிரபலங்கள்
சந்திரபாபு, சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா மட்டுமின்றி தாசரி நாராயணராவ், முரளி மோகன், தமிழக ஆளுநர் ரோசய்யா என இந்தப் பட்டியல் நீள்கிறது.
தப்பிய கிரண், ஜெகன்
அதே நேரத்தில் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் கெளரவ தலைவர் ஒய்.எஸ். விஜயலட்சுமி மற்றும் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோரது பெயர்கள் சொந்த தொகுதியில் இருப்பதால் அவர்களுக்கு சிக்கல் இல்லையாம்
வல்லுநர்கள் சொல்வது என்ன?
ஹைதராபாத்தில் வாக்காளர் பெயர் இருந்தாலும் 10 ஆண்டுகாலத்துக்கு தெலுங்கானா மற்றும் சீமாந்திராவுக்கு அது பொதுத் தலைநகர் என்பதால் சீமாந்திராவில் அவர்கள் போட்டியிட முடியும் என்கிறார் முன்னாள் தேர்தல் ஆணையர் கே.ஜே. ராவ். ஆனால் 10 ஆண்டுகள் கழித்து தங்களது பெயரை சீமாந்திராவுக்கு மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம் என்கின்றனர் வல்லுநர்கள்.