பாஜகவில் பிரதமர் வேட்பாளராக 10 பேர் ...: அருண்ஜேட்லி அதிரடி பேட்டி!

பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்படக் கூடும் என்று கருதப்பட்டு வருகிறது. இதற்கு முன்னோட்டமாக லோக்சபா தேர்தல் பிரசாரக் குழுவின் தலைவராக மோடி நியமிக்கப்பட்டுள்ளார். எந்த நேரத்திலும் மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டும் வருகிறது.
இந்த நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்த அருண் ஜேட்லி, பாரதிய ஜனதாவில் தற்போதைய நிலையில் 10 பேர் பிரதமர் வேட்பாளருக்கான போட்டியில் இருக்கின்றனர். அரை இறுதி, இறுதிக் கட்டத்தை தாண்டி இவர்களில் ஒருவர்தான் இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுவார். இங்கு பல முகங்கள், பல குரல்கள் என வெளிப்படையாக இயங்கி வருகிறோம். அது கட்சிக்கு ஆரோக்கியமானது.
பாரதிய ஜனதா கட்சி என்பது நன்கு கட்டமைக்கப்பட்ட ஒரு கட்சி. மற்ற கட்சிகளைப் போல எந்த ஒரு குடும்ப உறுப்பினர்களால் நிர்வகிக்கப்படுவது இல்லை. வாஜ்பாயும் அத்வானியும் பாஜகவின் முதல் தலைமுறை தலைவர்கள். அவர்கள் இயற்கையான தலைவர்கள். அடுத்த தலைமுறையாக மத்தியில் 6,7 தலைவர்களும் மாநிலங்களில் 5 முதல் 6 தலைவர்களும் உருவாகியுள்ளனர்.
பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் மற்றும் ஆதரவு தொகுதிகளில் மோடிக்கு நல்ல மதிப்பு இருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் எங்களது தலைவர் யார் என்பதை உரிய நேரத்தில் அறிவிப்போம் என்றார்.
நரேந்திர மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்று பேசப்பட்டு வரும் நிலையில் 10 பேர் போட்டியாளர்கள் என்று அருண் ஜேட்லி கூறியிருப்பது அக்கட்சியில் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.












Click it and Unblock the Notifications