நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு கோப்புகள் திடீர் மாயம்- நாடாளுமன்றத்தில் அமளி!!
டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான கோப்புகள் திடீரென மாயமானது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இன்று அமளியில் ஈடுபட்டதால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் அனைத்து நாட்களுமே இரு சபைகளிலும் அமளிதான். ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல், தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு, தனி மாநில கோரிக்கைகள், பீகார் ரயில் விபத்து போன்ற பிரச்சனைகளால் ஒவ்வொரு நாளும் சபை நடவடிக்கைகள் முடங்கிப் போயின.
இன்று காலை நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் கூடிய போது, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு கோப்புகள் மாயமானது தொடர்பாக பிரதமர் விளக்கம் அளித்த பின்னரே சபை நடவடிக்கைகள் தொடங்க வேண்டும் என்று பாரதிய ஜனதா எம்.பி.க்கள் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்குதேசம் எம்.பி.க்களும் முழக்கங்களை எழுப்பினர்.
இதனால் சபைகளில் கூச்சல், குழப்பம் நீடித்தது. இந்த அமளிக்கிடையே பல மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. பின்னர் சபை நடவடிக்கைகள் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டன.