நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு.. மாயமான கோப்புகளை தேடுகிறோம்.: அமைச்சர் ஜெய்ஸ்வால் தகவல்
டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பாக மாயமான கோப்புகளைத் தேடுகிறோம் என்று நாடாளுமன்றத்தில் நிலக்கரித் துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் விளக்கம் அளித்துள்ளார்.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் தேவையான ஆவணங்களை சிபிஐக்கு அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் மத்திய அரசிடம் சிபிஐ கோரிய முக்கிய ஆவணங்கள், மாயமாகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
எதிர்க்கட்சி எம்.பிக்களின் கடுமையான அமளிக்கு மத்தியில் ராஜ்யசபாவில் நிலக்கரித் துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் விளக்க அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து பேசினார். அவர் பேசுகையில், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக மொத்தம் 13 எஃப்.ஐ. ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிபிஐ கோரியபடி 769 கோப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. தற்போது காணாமல் போன கோப்புகள் தேடப்பட்டு வருகின்றன. அவற்றை விரைவில் சிபிஐ வசம் ஒப்படைப்போம். என் மீது சுமத்தப்படும் புகார்களுக்கு உரிய ஆதாரம் அவசியம். அப்படி ஆதாரங்களைக் கொடுத்தால் நான் தண்டனையை எதிர்கொள்ளத் தயார். அதே நேரத்தில் பொய்யான அவதூறுகளை பரப்பினால் எதிர்க்கட்சித் தலைவர் தண்டனையை எதிர்கொள்ள தயாரா? என்று கேள்வி எழுப்பினார்.
இதைத் தொடர்ந்து பேசிய பாஜக தலைவர் அருண்ஜேட்லி, 2004ஆம் ஆண்டுக்கு முந்தைய கோப்புகள் அனைத்துமே காணாமல் போய்விட்டனவா? இதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளதா? தற்போது காணாமல் போன அல்லது மாயமாகிப் போன கோப்புகள் எந்த நிறுவனங்களுடையது என்பதை மத்திய அரசால் தெரிவிக்க முடியுமா? கோப்புகள் காணாமல் போகவில்லை. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான கோப்புகள் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளன என்றார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி பேசுகையில், மத்திய கணக்குத் தணிக்கை துறை இந்த கோப்புகளை ஆராய்ந்திருக்கும் அல்லவா? காணாமல் போன கோப்புகளை கணக்கு தணிக்கை துறையிடம் இருந்து பெற்று தரலாமே என்று குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications