மதுரையில் தேர்வுக்கு படிக்காததால் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த +2 மாணவி

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே இருக்கும் திருநகர் பசும்பொன் நகரில் இந்திராகாந்தி நினைவு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. நேற்று காலை ஆசிரயர்கள், மாணவர்கள் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது வேடர்புளியங்குளத்தைச் சேர்ந்த மாணவியை 2 சக்கர வாகனத்தில் வந்தவர் மறித்து தனது மகள் இதே பள்ளியில் படிப்பதாகவும், இன்று வரமுடியாததால் விடுப்பு கடிதத்தை ஆசிரியரிடம் கொடுக்குமாறும் கூறி ஒரு கடிதத்தை கொடுத்துச் சென்றார்.
அந்த மாணவியும் அந்த கடிதத்தை எடுத்துச் சென்று ஆசிரியரிடம் கொடுத்துள்ளார். கடிதத்தை பிரித்துப் பார்த்த ஆசிரியர் அதிர்ச்சி அடைந்தார். காரணம் அது விடுப்பு கடிதம் அல்ல பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள கடிதம்.
இது குறித்து உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து பள்ளியில் சோதனை செய்தபோது வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதற்கிடையே பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பும் இந்த பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதே நாளில் திருமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து அந்த 2 பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் தான் இந்திராகாந்தி பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
அந்த கடிதத்தில் எழுதியிருப்பதாவது,
இன்று உங்கள் பள்ளியில் குண்டு வெடிப்பது நிச்சயம். அன்று ஒரு நாள், உங்களுக்கு எச்சரிக்கை மட்டுமே அளிக்கப்பட்டோம். ஆனால் இன்று கண்டிப்பாக நிறைவேறும். உங்களால் இந்த குண்டு வெடிப்பை தடுக்க முடியாது. முடிந்தால் உங்கள் மாணவர்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள். இது உண்மை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்திராகாந்தி பள்ளிக்கு அருகே உள்ள வீட்டில் தான் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தங்கி இருக்கிறார். அந்த வீட்டில் தங்கி தான் அவர் மதுரையில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இதனால் அவர் தங்கியுள்ள வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
அந்த கடிதத்தை எழுதியது யார் என்று போலீசார் விசாரித்ததில் அதே பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவி ஒருவர் சிக்கினார். மாடல் தேர்வுக்கு படிக்காததால் அன்று பள்ளிக்கு விடுமுறை விடட்டும் என்று நினைத்து அவர் தான் அந்த கடித்ததை எழுதியுள்ளார். ஆனால் மாணவியிடம் போலீசார் விசாரித்தபோது மேற்கொண்டு விசாரித்தால் தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டினார்.
இதையடுத்து மாணவியின் நலன் கருதி போலீசார் அவரையும், அவரது பெற்றோரையும் எச்சரித்து விட்டனர்.












Click it and Unblock the Notifications