வினோதினியை ஆசிட் வீசி கொன்றவனுக்கு ஆயுள் தண்டனை!: காரைக்கால் நீதிமன்றம் தீர்ப்பு
தீபாவளிப் பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாடிவிட்டு சென்னை திரும்புவதற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14-ஆம் தேதி இரவு பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்த வினோதினி மீது சுரேஷ் என்பவர் ஆசிட் வீசினார்.
இந்த சம்பவம் நடந்ததற்கு அடுத்த நாள் சுரேஷ் கைது செய்யப்பட்டார். அதே தினத்தில் மேல் சிகிச்சைக்காக வினோதினி சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டார். தொடர் விசாரணைகளுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் 167 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் பிப்ரவரி 12-ஆம் தேதி வினோதினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், கொலை முயற்சி வழக்காக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை கொலை வழக்காக மாற்றி கடந்த மார்ச் மாதம் 16-ஆம் தேதி காவல்துறையினர் தாக்கல் செய்தனர்.
ஏப்ரல் 29-ஆம் தேதி வினோதினி வழக்கு விசாரணை தொடங்கியது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுரேஷ் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே மே மாதம் 23-ஆம் தேதி ஜாமினில் வெளி வந்தார். அதனை தொடர்ந்து ஜூன் 10 முதல் 25-ஆம் தேதிகள் வரை 24 பேரிடம் அரசு தரப்பில் சாட்சியம் விசாரிக்கப்பட்டது.
ஜூலை 9-ஆம் தேதி சுரேஷிடம் நடந்த விசாரணையில் 115 கேள்விகள் நீதிபதி மூலம் கேட்கப்பட்டது. ஜூலை 17,22,25-ஆம் தேதிகளில் விசாரணை நடத்தப்பட்டது. ஜூலை 29-ஆம் தேதி இரு தரப்பு வாதங்களும் எழுத்து பூர்வமாக கொடுக்கப்பட்டது. கடந்த 12- ஆம் தேதி முழு விசாரனையும் முடிந்து தீர்ப்பு ஒத்துவைக்கப்பட்டது.
இந்த நிலையில், குற்றவாளிக்கு இன்று ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. காயப்படுத்துதல், கொடுங்காயம் ஏற்படுத்துதல் கொலை செய்தல் பிரிவுகளின் கீழ் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்த நீதிமன்றம், ஒரு லட்சம் அபராதம் விதித்துள்ளது. அபராதத் தொகையில் ரூ.50 ஆயிரத்தை வினோதினி குடும்பத்துக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.