பெனாசிர் புட்டோ கொலையாளிகளுக்கு முஷாரப் உதவினார்: நீதிமன்றம்
இஸ்லாமாபாத்: முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் புட்டோ கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மீது நீதிமன்றம் குற்றம் சுமத்தியுள்ளது.
இந்தக் கொலைக்கான முக்கிய காரணமாக இருந்ததாகவும், கொலை செய்யத் திட்டமிட்டதாகவும், கொலையாளிகளுக்கு உதவும் வகையில் செயல்பட்டதாகவும் ராவல்பிண்டி பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தில் குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை முஷாரப் மறுத்துள்ளார்.
பெனாசிர் புட்டோ கொலை வழக்கில் முஷாரப் குற்றம் சாட்டப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
முன்னதாக புட்டோ கொலை வழக்கு, பலுசிஸ்தான் தேசியவாதத் தலைவர் அக்பர் பக்டி கொலை வழக்கு, அவரச நிலையை அமல்படுத்தி நீதிபதிகளை தடுப்புக் காவலில் வைத்த வழக்கு ஆகியவற்றின் கீழ் முஷாரப் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, சிறையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால், இஸ்லாமாபாத் புறநகர்ப் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் முஷாரப் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.