நைட் டிரஸ்ஸில் பிளைட் ஏற வந்த சவூதி பயணிகள்: அனுமதி மறுத்த அதிகாரிகள்
ரியாத்: இரவு உடையோடு விமானத்தில் ஏற வந்த சவூதியைச் சேர்ந்த இரு பயணிகளை விமான நிலைய மக்கள் தொடர்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் தங்கள் உடைகளை மாற்றிக் கொண்ட பின்னர் விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
மதீனாவில் இருந்து தபூக் செல்வதற்காக சவூதி அரேபியா விமான நிலையத்திற்கு வந்த இரு ஆண் பயணிகள் இரவு உடை அணிந்திருப்பதைக் கண்டனர் விமான நிலைய மக்கள் தொடர்பு அதிகாரிகள். இதனால் அவர்கள் இருவரையும் விமானத்தில் ஏற அனுமதி தர இயலாது எனத் தெரிவித்தனர்.
அதன் பின்னர் அப்பயணிகள் இருவரும் மறைவான இடத்திற்குச் சென்று தங்கள் பெட்டியில் இருந்த மற்றொரு உடையை அணிந்து வந்தனர், இதைத் தொடர்ந்து அவர்கள் பயணம் செய்ய அனுமதி கொடுத்தது நிர்வாகம்.
இச்சம்பவத்தை நேரில் பார்த்த சிலர், இது குறித்து சமூக வலை தளங்களில் கார்ட்டூன் செய்தி போட்டனர். அதனைத் தொடர்ந்து விமான நிலைய அதிகாரிகள் மீது கண்டனக் கணைகள் தொடுக்கப்பட்டு வருகின்றன.
உடை என்பது தனிமனித சுதந்திரம் என மக்களும், பொது இடங்களில் பயணம் செய்யும் போது உடை வரைமுறை உண்டு என அதிகாரிகள் சார்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப் பட்டு வருகிறது.
கடந்த ஆண்டும் இதே போல், உடை விவகாரத்தில் விமான நிலையத்தில் சிக்கி பெண்ணொருவர் சர்ச்சையை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications