காங்கிரஸ் தலைமையிலான அரசு இனி ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது: வைகோ
சென்னை: வருகின்ற நாடாளுமன்றத்தில் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள். அத்யாவசியப் பொருட்களின் விலைகளை உயர்த்திக்கொண்டே போகும் காங்கிரஸ் தலைமையிலான அரசு, இனி ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
ம.தி.மு.க சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா, கட்சியின் மாநாடு விருதுநகரில் செப்டம்பர் 15 ஆம் தேதி நடக்கிறது. மாநாட்டிற்காக பந்தல் அமைக்கும் பணியை இன்று கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ பார்வையிட்டார்.அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய வைகோ கூறியதாவது:
காமன்வெல்த் மாநாடு
"இந்தியாவின் ஏற்பாட்டில் இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடக்க இருக்கிறது. இனக்கொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை, நடத்தக்கூடாது. இந்த மாநாடு நடத்துவதன் மூலம் கூட்டுக்குற்றவாளி இந்தியா தப்பித்துக்கொள்ளலாம் என நினைக்கிறது.
இந்நிலையில், இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்று, காங்கிரஸ் தலைமையிலான அமைச்சரவையில் இருந்த கூட்டுக் குற்றவாளிகள் கூறி வருகிறார்கள். அது ஏமாற்று நாடகம்.
மெட்ராஸ் கஃபே
விடுதலைப்புலிகளை கொச்சைப்படுத்தும் மெட்ராஸ் கஃபே என்ற திரைப்படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி படம் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தத் திரைப்படத்தை இந்திய அரசு தடை செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் திரையிட தமிழர்கள் அனுமதிக்கக் கூடாது.
தமிழகத்தில் திரையிடுவதற்கு, தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது; திரை அரங்குகளின் உரிமையாளர்கள் திரையிடக் கூடாது என வேண்டுகிறேன். தமிழகத் திரை உலகத்தினர், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையிடுவதைத் தடுப்பதற்கு முன்வர வேண்டுகிறேன்.
படத்தை திரையிடக்கூடாது
இந்திய அமைதிப்படையால் எவ்வளவு பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள் என்பதை நான் ஆதாரங்களோடு நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறேன். இந்த திரைப்படத்தை திரையிடக்கூடாது என்று நாங்கள் அறவழியில் போராடுகிறோம். இதற்கு மேலும் இப்படம் தமிழ்நாட்டில் திரையிடப்படுமானால், திரை அரங்குகளை முற்றுகை இடும் அறப்போரை நடத்துவோம்; கழகக் கண்மணிகளும், தமிழ் உணர்வாளர்களும், ஈழத்தமிழர் உரிமைக்குத் தொடர்ந்து போராடி வருகின்ற தோழர்களும், களமாடிய மாணவர்களும், பெருந்திரளாகப் பங்கு ஏற்கேற்று போராடுவோம்.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையினால், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்திருக்கிறது. இந்திய அரசும் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் அந்நிய முதலீடை மத்திய அரசு அனுமதித்திருக்கிறது.
ஆட்சிக்கு வரமுடியாது
மாதத்திற்கு இரண்டு முறை பெட்ரோல் விலை, டீசல் விலை உள்ளிட்ட அத்யாவசியப் பொருட்களின் விலைகளை உயர்த்திக்கொண்டே போகும் காங்கிரஸ் தலைமையிலான அரசு, இனி ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது. வருகின்ற நாடாளுமன்றத்தில் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள்" என்றார்.