தூத்துக்குடி உப்புக்கு வந்த சோதனையைப் பாருங்கள்.. கவனிக்குமா அரசு?
தூத்துக்குடி: தூத்துக்குடியை சுற்றி பெருகி வரும் அனல் மின் நிலையங்கள், ரசாயன தொழிற்சாலைகளால் உப்பு உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டு வரும் சூழலில்,
கப்பல் கட்டும் தளத்தாலும் உப்பு உற்பத்தி முடங்கும் என உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இதற்கு உடனடியாக கட்டுப்பாடு விதிக்காவிட்டால் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அரசு உடனடியாக இதில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உப்பில்லாத பண்டம் குப்பையிலே
'உப்பில்லாத பண்டம் குப்பையிலே' என்ற பழமொழிகேற்ப நாம் உண்ணும் அனைத்து உணவுப்பொருட்களுக்கும் உப்பு கண்டிப்பான தேவையாகும். இதுபோக தோல் பதனிடும் தொழில், மீன்களை பதப்படுத்துதல் மற்றும் கெமிக்கல் தொடர்பான தொழில்களுக்கு உப்பு பயன்படுத்தப்படுகிறது.
பெரும்பகுதி சொந்த உப்புதான்
இந்தியாவிற்கு தேவையான உப்பில் பெரும் பகுதி உப்பு நமது நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் முதலிடத்தையும், தமிழகம் 2வது இடத்தையும் பெற்று திகழ்கிறது.
தமிழகத்தில் தூத்துக்குடிதான் நம்பர் ஒன்
தமிழகத்தைபொறுத்தவரை மற்ற கடலோர மாவட்டங்களை காட்டிலும் தூத்துக்குடி மாவட்டம் உப்பு உற்பத்தியில் முதலிடம் பெற்றுள்ளது. மற்ற பகுதிகளில் உற்பத்தியாகும் உப்பினை காட்டிலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உற்பத்தியாகும் உப்பிற்கு தனிச்சுவை உள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
பல நாடுகளுக்கும் போகிறது
தூத்துக்குடியில் உற்பத்தியாகும் உப்பு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல வெளிமாநிலங்களுக்கும், இந்தோனேசியா, மாலத்தீவு, பிலிப்பைன்ஸ், இலங்கை உள்ளிட்ட பல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது.
25,000 ஏக்கர் பரப்பளவில்
தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், குளத்தூர், அய்யனார்புரம், வேப்பலோடை, தருவைக்குளம், கீழஅரசரடி, தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் -ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. போர்ச்சுகீசியர்கள் காலத்தில் உப்பு உற்பத்திக்கு தேவையான தண்ணீர் கடலில்
இருந்து நேரடியாக உப்பு வயல்களுக்கு கொண்டுவரப்பட்டது.
கால்வாய்கள் காலி
தற்போது காலத்தின் மாற்றத்தில் கடலில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் உப்பு வயல்களுக்கு தண்ணீர் கொண்டு வரப்படும் கால்வாய்கள் எல்லாம் தூர்ந்து போனது. அத்துடன் தற்போதை சூழ்நிலையில் கடலில் கலக்கும் நகரங்களின் சாக்கடை கழிவுகள், தொழில்நிறுவனங்களின் கழிவுகள் போன்றவற்றால் கடல்நீரும் மாசடைந்து வருகிறது. இதனால் உப்பு உற்பத்திக்கு தேவையான தண்ணீர் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு அதிலிருந்து எடுக்கப்படுகிறது.
உப்புக்குத் தண்ணீர் இல்லை
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சுமார் 40முதல் 50அடி ஆழத்திலேயே உப்பு உற்பத்திக்கு தேவையான தண்ணீர் கிடைத்தது. ஆனால் தற்போது நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டதால் சுமார் 180முதல் 200 அடி ஆழத்தில் தான் தண்ணீர் கிடைக்கிறது.
நீர்மட்டம் குறைந்தது
நிலத்தடி நீர்மட்டம் குறைவு, மின்வெட்டு, மின்கட்டணம் உயர்வு, உப்பளங்களுக்கான குத்தகை தொகை உயர்வு, தொழிலாளர்கள் பற்றாக்குறை, உற்பத்திக்கான செலவு அதிகரித்தல், எதிர்பாரதவிதமாக ஏற்படும் இயற்கை சீற்றங்கள், போதிய விலையின்மை போன்றவற்றால் உப்பு உற்பத்தி தொழில் நாளுக்குநாள் நலிவடைந்து வருகிறது.
அனல் மின் நிலையங்களால் ஆபத்து
இத்தகையசூழ்நிலையில் தூத்துக்குடி மாவட்ட கடற்கரையோர பகுதிகளில் பெருகிவரும் அனல்மின் நிலையங்களால் உப்பு உற்பத்தி தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதாவது அனல்மின் நிலையங்களில் நிலக்கரியை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மின்உற்பத்தியின்போது வெளிப்படும் புகையானது மிகஉயரமான அளவில் அமைக்கப்பட்ட சிமிணிகள் மூலம் வெளியேறுகிறது.
புகை சாம்பலால் உப்பளங்கள் பாதிப்பு
புகையுடன் கலந்துவரும் இலகுவான சாம்பல் தூகள்கள் சுழற்றி அடிக்கும் காற்றின் வேகத்தில் நான்கு திசைகளில் அடித்து செல்லப்பட்டு அருகில் இருக்கும் உப்பளங்கள் மீது படிகிறது. இதனால் உப்பின் தரம் குறைவதுடன், உப்பும் மாசுபடுகிறது. ஏற்கனவே உப்பு உற்பத்தி தொழிலானது, உப்பிற்கு போதுமான விலை இல்லாமல் நலிவடைந்துள்ள நிலையில் அனல்மின் நிலைய சாம்பல் துகள்களாலும் உப்பு உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களும் இல்லையே
இதுபோக உப்பளத்தில் வேலைபார்க்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்துகொண்டே வருகிறது. புதியதாக உப்பளத்தொழிலுக்கு யாரும் வருவதில்லை.
கப்பல் தளம் வந்தால் உள்ளதும் போச்சு
இதுஒரு புறம் இருக்க, தூத்துக்குடி துறைமுகம் அருகே கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அரசின்உத்தரவால் அப்பகுதியிலுள்ள ஏராளமான உப்பள நிலங்கள் கையப்படுத்தப்படவுள்ளது. இது உப்பு உற்பத்தியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் உப்பு வந்து விடுமே
இதுபோன்ற காரணங்களால் மாவட்டத்தில் உப்பளத்தொழில் முடங்கி வருவதுடன், தருவைகுளம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உப்பளங்கள் வீட்டுமனைகளாகவும் மாறிவருகின்றன. இப்படியாக உப்பு உற்பத்தி தொழில் நலிவடைந்து வருவதால் குஜராத் மாநில உப்பு தமிழகத்திற்கு இறக்குமதியாகும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது.
முடங்கிப் போய் விடும்
இதேநிலை தொடர்ந்தால் தூத்துக்குடி மாவட்ட உப்பு உற்பத்தி தொழில் முற்றிலுமாக முடங்கிப்போய் விடும் என்பதே சிறுஉப்பு உற்பத்தியாளர்கள், உப்பளத் தொழிலாளர்களின் பெரும் கவலையாகும். உப்பு உற்பத்தி தொழிலை பாதுகாத்து மேம்படுத்திட மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையும் பலமாக எழுந்துள்ளது.
உற்பத்தி செலவு அதிகரிப்பு
ஒரு டன் உப்பு உற்பத்தி செய்ய ரூ.500க்கும் அதிகமாக செலவாகும் நிலையில், குறைந்த தொகைக்கே உப்பு விலை போகிறது. உப்பின் தரம் நன்றாக இருந்தால் டன்னுக்கு 100ரூபாய் கூடுதலாக கிடைக்கிறது. சிறிய அளவிலான உப்பு உற்பத்தியாளர்களுக்கு சலுகைகள் ஏதும் கிடைப்பதும் இல்லை. ஆட்கள் பற்றாக்குறையால் தள்ளாடிவரும் உப்பு உற்பத்தி தற்போது உப்பள பகுதிகளில் பெருகிவரும் அனல்மின்நிலையங்கள் மற்றும் தொழிற்சாலை கழிவுகளால் மாசுபட்டு வருகிறது.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சொல்வதென்ன
இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால், விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் அனல்மின் நிலையங்கள், தொழிற்சாலைகள் செயல்படுகின்றன என்று ஆய்வு செய்யாமலேயே பதில் அளிக்கின்றனர். மவுனமாக இருக்கும் மாசுகட்டுப்பாட்டு வாரியம் மனது வைத்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தரமான உப்பினை விளைவிக்கமுடியும் என்று உப்பு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
அரசே நடவடிக்கை எடு
''உப்பிட்டவரை உள்ளளவும் நினை'' என்று சொல்வதற்கேற்ப உப்பு உற்பத்தியாளர்களின் வேண்டுகோள் அரசின் காதுகளில் விழுந்து உப்பு உற்பத்தி தொழில் பாதுகாக்கப்பட்டால் சரிதான்.