இந்தியர்கள் தொடங்கிய வங்கி மீது இந்தியர்களே புகார்.. அமெரிக்காவில் கூத்து
வாஷிங்டன்: அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களால் தொடங்கப்பட்ட லோட்டஸ் வங்கி இனப்பாகுபாடு பார்ப்பதாக கூறி அங்கு வாடிக்கையாளர்களாக உள்ள இந்தியர்களே வழக்குப் போட்டுள்ளனர். இதில் அந்த வாடிக்கையாளர்களுக்கு ஆதரவாக மிச்சிகன் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
நோவி என்ற இடத்தைச் சேர்ந்த இந்தியர்களும், கிழக்கு ஆசிய வர்த்தக சமுதாயத்திரும் சேர்ந்துதான் இந்த வங்கியைத் தொடங்க உதவினர்.
லோட்டஸ் பாங்க் கார்ப் என்ற நிறுவனத்தின் சார்பில் லோட்டஸ் வங்கி தொடங்கப்பட்டது. இந்த வங்கியில் இந்திய வம்சவாளியினரே அதிக அளவில் முதலீடு செய்துள்ளனர்.மேலும் வங்கியின் நிர்வாகக் குழுவிலும் இந்தியர்களே பெரும்பான்மையினராக உள்ளனர்.
இந்த நிலையில் வங்கி வாடிக்கையாளர்களான ஜஸித் தக்கார் மற்றும் அனில் குப்தா ஆகியோர் மிச்சிகன் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர். அதில், கடந்த மார்ச் மாதம் நாங்கள் ஜாக்சன் நகரில் ஒரு மோட்டலை வாங்குவது தொடர்பாக 10.5 லட்சம் டாலர் அளவுக்கு கடன் வாங்க வங்கியை அணுகினோம். ஆனால் கடன் தராமல் இனப் பாகுபாட்டுடன் நடந்து கொண்டது வங்கி நிர்வாகம் என்று கூறியிருந்தனர்.
வங்கியின் தலைவர் நீல் சியார்லே மற்றும் துணைத் தலைவர் ரிச்சர்ட் பாயர் ஆகியோருக்கு அனுப்பப்பட்ட இமெயில் தொடர்புகளை ஆதாரமாக இவர்கள் கோர்ட்டில் சமர்ப்பித்தனர். மேலும் வங்கியின் தலைமை கடன் வழங்கும் அதிகாரியான ஜான் வெஸ்டர்ஹைட் என்பவர் இந்தியர்கள் குறித்து அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி அனுப்பிய இமெயில்களையும் சேர்த்திருந்தனர்.
இதில் பாயர் அனுப்பிய ஒரு மெயிலில், நல்ல இந்தியர் யார் என்றால் செத்துப் போன இந்தியராகத்தான் இருக்க முடியும் என்று கூறியுள்ளார். அதேபோல சியர்லே அனுப்பிய ஒரு மெயிலில், நீங்க என்ன சொல்றீங்கன்னே தெரியலை. ஆனால் நான் முடிவெடுத்து அறிவிக்கிறேன். உங்களுக்கு நான் பேசுற ஆங்கிலம் புரிகிறதா என்று கேட்டுள்ளார்.
இந்த வழக்கை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று எதிர்மனுதாரர்களின் வக்கீல் கோரிக்கை விடுத்தார். இருப்பினும் நீதிமன்றம் அந்தக் கோரிக்கையை நிராகரி்ததது. மாறாக, புகார்கள் குறித்து விசாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.