குஜராத் போலீஸ் டிஜிபி அமிதாப் பதக் தாய்லாந்தில் மரணம்!
தனது குடும்பத்தினருடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற அவர் பாங்காக் நகரில் இறந்தார். அவருக்கு வயது 58. நீச்சல் அடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
சுதந்திர தினத்தன்று முதல்வர் நரேந்திர மோடி புஜ் நகரில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது அருகில் நின்றிருந்த பதக் மயங்கி விழுந்தது குறிப்பிடத்தக்கது. மிகவும் களைப்பாக இருந்ததால் மயக்கம் ஏற்பட்டதாக பதக் தெரிவித்திருந்தார். இந் நிலையில் தாய்லாந்தில் மரணமடைந்துள்ளார்.
சிபிஐ கஸ்டடியில் பிபி பாண்டேவை சந்தித்த பதக்:
முன்னதாக இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்ட்டர் வழக்கில் கைது செய்யப்பட்டு சிபிஐ கஸ்டடியில் இருந்த மூத்த போலீஸ் அதிகாரி பிபி பாண்டேவை டிஜிபி அமிதாப் பதக் மேலும் 2 அதிகாரிகளுடன் கடந்த திங்கள்கிழமையன்று நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் இந்த சந்திப்பு நடந்தது. இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று பதக் கூறியது குறிப்பிடத்தக்கது.