மக்களை புறக்கணிக்கும் ரயில்வேயால்.. மக்களால் புறக்கணிக்கப்படப் போகும் கட்சிகள்...!
விருதுநகர்: தென் மாவட்டங்களை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது தெற்கு ரயில்வே. இதைக் கண்டும் காணாமல் இருக்கும் அரசியல்கட்சிகளை மக்கள் வரும் லோக்சபா தேர்தலில் புறக்கணிக்கும் மன நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர்.
தொடர்ந்து விடுக்கப்பட்டு கோரிக்கைகள் குறித்து தெற்கு ரயில்வே செவிடன் காதில் ஊதிய சங்கு போல நடந்து வருவதால் தென் மாவட்ட மக்கள் ஒட்டுமொத்தமாக அதிருப்தியின் உச்சத்தில் உள்ளனர்.
தங்களது வெறுப்பை வரும் லோக்சபா தேர்தலில் அவர்கள் மொத்தமாக வெளிக்காட்டி அரசியல் தலைவர்களுக்குப் பாடம் கற்பிக்க அவர்கள் தயாராகி வருவதாக பரபரப்பு எழுந்துள்ளது.
பொதிகையை நம்பி...
நெல்லை மாவட்டத்தில் தமிழக கேரளா எல்லைபகுதியான செங்கோட்டை, தென்காசி, குற்றாலம், கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர் ஆகிய பகுதிகளிலிருந்து நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் சென்னைக்கு பொதிகைஎக்ஸ்பிரஸ் ரயிலை மட்டுமே நம்பி செல்கின்றனர். ஆனால், இந்த வழித்தடத்தில் இந்த ஒரு ரயில் ( பொதிகை எக்ஸ்பிரஸ்) மட்டுமே இயக்கப்படுகிறது. அதுவும் நீண்டகால போராட்டத்திற்குப்பிறகுதான் கிடைத்தது.
கூட்ட நெரிசல் அதிகம்
சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச்செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பாண்டியன் எக்ஸ்பிரஸை தவிர்த்து அதிக கூட்ட நெரிசல் உள்ள ஒரே ரயில் பொதிகை எக்ஸ்பிரஸ்.... இதனை தெற்கு ரயில்வே நிர்வாகமே ஒத்துக்கொண்டிருக்கிறது.
கூடுதல் ரயில் தரக் கூடாதா
போக்குவரத்து அதிகம் உள்ள இந்த தடத்தில் சென்னையிலிருந்து செங்கோட்டைக்கு கூடுதல் ரயில் இயக்க மறுக்கப்படுகிறது. கோடை காலங்களில் சிறப்பு ரயில் என வாரம் ஒருமுறை மட்டும் இயக்கப்படும். அதுவும் 2 மாதங்களுக்கு மட்டும்தான்.அந்த சிறப்பு ரயில் குறித்து போதிய விளம்பரங்களை ரயில்வே நிர்வாகம் அறிவிக்காது.
கேரள அரசியல்வாதிகள் பெட்டர்...
நாகர்கோவிலுக்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த வாராந்திர சிறப்பு ரயில் தினசரி ரயிலாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு காரணம்.. கேரளாவில் உள்ள அரசியல்வாதிகள் எளிதாக திருவனந்தபுரம் செல்ல இது வசதி என்பதால் மத்தியில் உள்ள கேரளத்து அதிகாரிகள் மூலம் தங்கள் மாநிலத்தை வளப்படுத்தி கொள்கின்றனர்.
ஒருவரும் குரல் கொடுக்கலையே
குமரி மாவட்ட மக்கள் தங்கள் ஊருக்கு தினசரி ரயில் வேண்டும் என்பதற்காக குரல்கொடுத்து போராட்டங்களை நடத்தினார்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு. ஆனால், இந்த பகுதிக்குட்பட்ட விருதுநகர் எம்பியோ, தென்காசி எம்பியோ, தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எம்.எல்.ஏ.க்களோ,பிற அரசியல் கட்சிகளோ குரல் கொடுக்கவில்லை.
வைகோ, ரவிச்சந்திரன் தவிர
பொதிகை ரயில் வருவதற்கு வைகோ.முன்னாள் எம்.பிக்கள் .சிப்பிப்பாறை ரவிசந்திரன், அப்பாத்துரையை தவிர யாரும் முயற்சி எடுக்கவில்லை. அவர்களுக்கு பின் இதுவரை தென்காசி வழியாக கூடுதல் ரயில் இயக்க கோரி யாரும் குரல் கொடுக்கவில்லை.
நெல்லை வழியாகத்தான்
சென்னை எழும்பூரிலிருந்து தென் மாவட்டங்கள் செல்லும் ரயில்கள் பெரும்பாலானவை நெல்லை சந்திப்பு வழியாகத்தான் செல்கின்றன.
திருநெல்வேலிக்கு நெல்லை எக்ஸ்பிரஸ் மட்டுமின்றி, நாகர்கோவில், கன்னியாகுமரி, ஆனந்தபுரி, குருவாயூர் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களும் வந்து செல்கின்றன.
ஏன் தென்காசி வழியாக கூடாது...
இப்படி ஒட்டுமொத்த ரயில்களும் நெல்லை வழியாக இயக்கப்படும்போது தென்காசி வழியாக ஏன் இயக்கக் கூடாது என்ற கேள்வி இப்பகுதி மக்களிடம் எழுந்துள்ளது.
விருதுநகர் வரை ஒரே தண்டவாளம்
தென் மாவட்ட ரயில்கள் அனைத்தும் விருதுநகர் வரை ஒரே தண்டவாளத்தில்தான் செல்கின்றன. அங்கிருந்து நெல்லைக்கு ஒரு மார்க்கத்திலும், தென்காசிக்கு மற்றொரு மார்க்கத்திலும் பிரிந்து செல்கின்றன. விருதுநகரிலிருந்து நெல்லை சென்றடைய சுமார் 3 மணி நேரம் ஆகும்.. அதே ரயிலை விருதுநகரிலிருந்து சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர் , தென்காசி வழியாக திருநெல்வேலிக்கு இயக்கலாம்.
ஆயிரக்கணக்கானோருக்குப் பலன் கிடைக்கும்
இதன் மூலம் செங்கோட்டை,, தென்காசி, குற்றாலம், கடையநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளிலிருந்து நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் பலனடைவார்கள். பொதிகை எக்ஸ்பிரஸில் கூட்ட நெரிசலும் குறையும்.வரும் பண்டிகை காலங்களை மனதில்கொண்டு தென்னக ரயில்வே ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமா..?
திமுகவை ஓரம் கட்டியது போல்
இந்த தடத்தில் ஏற்கனவே சென்னையிலிருந்து தென்காசி வழியாக நெல்லைக்கு இயக்கிய நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலையாவது மீண்டும் இயக்கினால் போக்குவரத்து குறையும். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விருதுநகர் முதல் நெல்லை வரை எப்படி காங்கிரஸ் கட்சியும்,அதன் கூட்டணியுமான திமுகவை ஓரம் கட்டினார்களோ அதேபோல் எதற்கும் செவி சாய்க்காமல் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு வரும் பாராளுமன்றத் தேர்தலில் சரியான பாடம் புகட்ட இப்போதே மக்கள், வியாபாரிகள், இளைய சமுதாயத்தினர் தயாராகி வருகின்றனர்.
செவி சாய்த்தால் நல்லது
இப்போதே மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றினால் வரும் லோக்சபா தேர்தலில் அதை எந்தக் கட்சி செய்கிறதோ, அந்தக் கட்சிக்கு சாதகமாக அமையும் என்பதில் மாற்று கருத்தில்லை