என்னம்மா இப்படிப் பண்ணிட்டீங்க, நா இன்னும் உயிரோடத்தான் இருக்கேன்....
நியூ யார்க்: இறந்து விட்டதாகக் கருதி நல்லடக்கம் செய்யப்பட்ட பெண், இரண்டு வாரங்களுக்குப் பிறகு திடீரென உயிரோடு வந்து நின்றால் எப்படி இருக்கும்...? அப்படி ஒரு ஆனந்த அதிர்ச்சி அமெரிக்க தாய் ஒருவருக்கு நிகழ்ந்திருக்கிறது.
அமெரிக்க பென்சில்வேனியா நகரைச் சேர்ந்தவர் ஷரோலின் ஜாக்சன் (50). இவர் கடந்த மாதம் திடீரென காணாமல் போனார். தனது மகள் ஷரோலினைக் காணவில்லை என போலீசில் புகார் செய்தார் அவரது தாயார் கேர்ரி மின்னி.
புகார் அளிக்கப்பட்டு சில நாட்களில் பிலடெல்பியா பகுதியின் சாலையோரம் ஒரு பெண்ணின் பிணம் கிடந்ததாகக் கூறி, கேர்ரியை அழைத்துக் காண்பித்தார்கள் போலீசார். அது தனது மகள் ஷரோலின் தான் என்பதை உறுதி செய்த கேர்ரி, தகுந்த மரியாதைகளோடு அவ்வுடலை அடக்கம் செய்தார்.
இந்நிலையில் கடந்த ஒருவாரத்திற்கு முன்னர் வீட்டு வாசலில் ஷரோலின் நிற்பதைக் கண்டு திடுக்கிட்டார் கேர்ரி. அது தன் மகளின் சாந்தியடையாத ஆத்மா என முதலில் நினைத்தார் கேர்ரி. ஆனால், அது பேயில்லை தன் மகள் ஷரோலின் தான் என்பதை அறிந்து அதிர்ந்து போய் ஆனந்தக் கண்ணீர் வடித்துள்ளார்.
இவ்விஷயம் போலீசாருக்குத் தெரிய வர, ஷரோலின் பழைய, புதிய கைரேகைகளை ஒப்பிட்டுப் பார்த்து அவர்களும் வந்திருப்பது ஷரோலின் தான் என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தனர். தாயும், மகளும் ஆனந்தத்தில் கட்டித்தழுவி மகிழ்ந்து கொண்டிருக்க போலீசார் தான் தலை முடியை பிய்த்துக் கொண்டு குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஷரோலின் தற்போது உயிரோடு வந்து விட்டார் அப்படியென்றால் அவரது பெயரில் புதைக்கப்பட்டது யாருடைய பிணம் என்ற குழப்பத்தில் அடக்கம் செய்யப்பட்ட பிணத்தை தோண்டியெடுத்து மீண்டும் சோதனை செய்து வருகின்றனராம் போலீசார்.