கோவிலுக்கு நுழைந்ததால்.. பெண்ணை அரை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்த கும்பல்.. இப்படி நடக்கவே கூடாது
மும்பை: மகாராஷ்டிராவின் உல்லாஸ்நகரில் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த ஒருவர் கோவிலுக்குள் நுழைந்ததால் ஆத்திரமடைந்தவர்கள் பெண்களை அடித்து தாக்கி அரை நிர்வாணப்படுத்தி செருப்பு மாலையும் 2 கிலோமீட்டர் வரை ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் அதிர வைத்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் உல்லாஸ்நகரின் வாக்ரி நகரில் வசித்து வருபவர் காந்தா பிரேம் ராஜ்புத் (வயது 50). அவரது சகோதர கீதா ராஜ்புத். மகள் அஞ்சி. இந்நிலையில் தான் இவர்களின் குடும்பத்தினர் அங்குள்ள கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

கோவிலில் நடக்கும் பூஜைகள் உள்பட பிற நிகழ்ச்சிகளில் இவர்கள் பங்கேற்க கூடாது. இதற்கான உத்தரவை அந்த உள்ளூர் பெரியவர்கள் பிறப்பித்தனர். இதற்கு காந்தா பிரேம் ராஜ்புத் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கோவிலுக்கு போன இளைஞர்
இந்நிலையில் தான் கோவில் வளாகத்தில் நிகழ்ச்சி மற்றும் பக்தர்களுக்கு விருந்து வழங்கப்பட்டது. அதில் பங்கேற்க காந்தா பிரேம் ராஜ்புத் குடும்பத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கோவிலுக்கு சென்றார். அங்கிருந்தவர்கள் அவரை கோவிலுக்குள் விட எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு இளைஞரும் எதிர்ப்பு தெரிவித்தார். ''நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. எங்களை ஏன் கோவிலுக்குள் அனுமதிக்க மறுக்கிறீர்கள்?'' என கேள்வி எழுப்பினார்.
சூறையாடப்பட்ட வீடு
இது கோவிலில் இருந்த ஒரு தரப்பினருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் உடனடியாக கட்டைகள், இரும்பு கம்பிகளை எடுத்து சென்று காந்தா பிரேம் ராஜ்புத்தின் வீட்டை தாக்கினர். பொருட்களை தூக்கி வீசி சூறையாடினர். மேலும் வீட்டில் இருந்தவர்களிடம் போலீசில் புகார் அளித்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டினர்.
அரை நிர்வாணப்படுத்தி ஊர்வலம்
ஆனாலும் காந்தா பிரேம் ராஜ்புத் பயப்படவில்லை. அவர் தனது சகோதரி கீதா ராஜ்புத், மகள் அஞ்சி ஆகியோருடன் காவல் நிலையத்துக்கு புகாரளிக்க சென்றார். இதுபற்றி அறிந்த அந்த கும்பல் உடனடியாக 3 பேரையும் இடைமறித்து அவர்களின் ஆடைகளை கிழித்து அரை நிர்வாணப்படுத்தினர்.
அதோடு கத்திரிக்கோலால் அவர்களின் முடியை வெட்டி கழுத்தில் செருப்பு மாலையை அணிவித்தனர். ஒரு பெண்ணை பொதுவெளியில் அரை நிர்வாண ஊர்வலமாக அழைத்து சென்றனர். ஊர்வலத்தின் போது பலரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தனர். இதுபற்றி பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகாரளித்தும் போலீசார் அதனை கண்டுக்கொள்ளவில்லை.
வெளியான வீடியோ
இதற்கிடையே தான் பெண்கள் அரை நிர்வாணப்படுத்தப்பட்டு செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட சம்பவத்தை அந்த வழியாக சென்றவர்கள் செல்போனில் வீடியோவாக எடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரவியது. அதன்பிறகு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஜூலி வாக்ரி, வினு வாக்ரி, பப்பி வாக்ரி, நிதின் தோராட், ரோஹித் வாக்ரி, சோனு (எ) பாலு வாக்ரி, மகேஷ் வாக்ரி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்ட்டுள்ளது. தற்போது வரை 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications