காலக் கொடுமைடா... 1000 ரூபாய் கொடுத்து கள்ளக்காதலனை விட்டு கணவரைக் கொன்ற பெண்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் தன்னை அடித்துக் கொடுமைப்படுத்திய கணவரை ஆயிரம் ரூபாய் காசு கொடுத்து கள்ளக்காதலனை விட்டுக் கொலை செய்தார் ஒரு பெண். அவர்கள் இருவரையும் தற்போது போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஆரல்வாய்மொழி வில்லவிளையை சேர்ந்தவர் தங்கத்துரை. இவருக்கு 47 வயது. செங்கல் சூளை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு 2 வயதான செல்வி என்ற மனைவி உள்ளார். மேலும் 23 வயது மற்றும் 21 வயதில் இரு மகன்களும் உள்ளனர்.
சுப்பிரமணியபுரம் வவ்வால்குகை பகுதியில் மலையில் வைத்து வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் தங்கதுரையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி விசாரித்தனர்.
விசாரணையில், அவரது மனைவி செல்விதான் தனது கள்ளக்காதலனை விட்டு கொலை செய்தது தெரிய வந்தது. செல்வியின் கள்ளக்காதலன் பெயர் சாயா செல்வன்.
போலீஸாரிடம் சாயா செல்வன் அளித்த வாக்குமூலத்தில், எனக்கும் வில்லவிளையை சேர்ந்த கலாவுக்கும் 23 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. எனக்கு மகன் பிறந்த 10-வது நாளில் கலா இறந்து விட்டார். என் மனைவி இறந்து 2 ஆண்டுகள் கழித்து எனது மனைவியின் சித்தி மகளான தங்கத்துரையின் மனைவி செல்வியுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இது தங்கத்துரைக்கு தெரியவந்ததும் கள்ளக்காதலை கண்டித்தார்.
பிறகு இன்னொரு பெண்ணுடன் குடும்பம் நடத்த தொடங்கினேன். இருப்பினும் என்னால் தங்கத்துரையின் மனைவி செல்வியை மறக்க முடியவில்லை. எனவே, தங்கத்துரை வீட்டில் இல்லாத நேரங்களில் செல்வியின் வீட்டிற்கு சென்று வருவது வழக்கம். இது எப்படியோ தங்கத்துரைக்கு தெரியவந்தது.
இதுபற்றி தெரிந்ததும் தங்கத்துரை தனது மனைவியை அடித்து துன்புறுத்தினான். இதை அவள் என்னிடம் சொல்லி அழுதாள். இனி உனக்கு அழக்கூடிய வாய்ப்பு வராது. நேரம் வரும்போது அவனை தீர்த்து கட்டிவிடலாம் என்று கூறினேன். அதற்கு பிறகு அவள் எனக்கு அடிக்கடி செலவுக்கு பணம் தர ஆரம்பித்தாள்.
அந்த பணத்தில் நான் மது வாங்கி அருந்துவேன். சில நேரங்களில் தங்கத்துரைக்கும் அந்த பணத்தில் மது வாங்கிக் கொடுப்பேன். இந்தநிலையில் கடந்த 22-ந்தேதி காலையில் எங்களது கள்ளத்தொடர்பை கூறி செல்வியை அவரது கணவர் தாக்கி இருக்கிறார். உடனே, எனது வீட்டிற்கு வந்த செல்வி ஆயிரம் ரூபாயை கொடுத்து, 2 நாட்களில் எனது கணவரை தீர்த்துக்கட்டிவிடு என்று கூறினார்.
இதனால் கடந்த வெள்ளிக்கிழமை காலை தங்கத்துரையை ரோட்டில் சந்தித்தேன். உடனே, அவரை கல்லறை தோட்டத்தில் வேலைக்கு அழைத்துச் சென்றேன். அங்கு கிடைத்த கூலிப்பணத்தில் இருவரும் மது அருந்தினோம். அதன்பின்னர் தங்கத்துரையிடம் வவ்வால் குகை மலைக்கு மேல் உடும்பு அதிகமாக உள்ளது என்றும், அதை பிடிக்க அரிவாள் எடுத்து வரும்படியும் கூறி அனுப்பிவைத்தேன்.
தங்கத்துரை வீட்டிற்கு சென்று அரிவாளை எடுத்துக்கொண்டு ஆட்டோவில் வந்தார். நானும் அந்த ஆட்டோவில் ஏறி சுப்பிரமணியபுரம் வரை சென்றோம். அதன்பின்னர் இருவரும் மலையின் மீது ஏறி சென்றோம். அங்கு ஒரு சுனை பகுதியில் சென்றதும் அரிவாளை நான் வாங்கிக்கொண்டேன். தங்கத்துரை எனக்கு முன்பாக சென்று கொண்டு இருந்தான்.
கொம்பன்திட்டை பகுதியில் சென்றபோது என்னிடம் இருந்த அரிவாளால் தங்கத்துரையின் கழுத்தில் வெட்டினேன். இதில் கீழே விழுந்த தங்கத்துரையின் தலையில் வெட்டினேன். இதனால் துடிதுடித்து அவன் இறந்தான் என்று கூறினார்.
செல்வி, செல்வன் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications