உளவுத்துறை எச்சரிக்கை… ரமேஸ்வரத்தில் ஆயுதப்படை போலீசார் குவிப்பு
ராமேஸ்வரம்: தென் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று மத்திய உளவுத்துறை மீண்டும் எச்சரித்துள்ளதை அடுத்து ராமேஸ்வரம் கோயிலில் ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள், இலங்கை கடல் பகுதி வழியாக தமிழகத்திற்குள் ஊடுவருவல் நடத்தப் போவதாக உளவுத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும் தமிழக கடலோரப் பகுதிகளில் ஊடுருவி மதுரை மற்றும் மயிலாடுதுறையில் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற தகவலும் வெளியாகி இருந்தது. இதையடுத்து தமிழக கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் தீவுப் பகுதி, இலங்கை கடல் பகுதியின் அருகாமையில் அமைந்திருப்பதால் ராமேஸ்வரம் தீவு முழுவதற்கும் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ராமநாதசாமி கோவில்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள்ளும், வெளியிலும் ஆயுதம் தாங்கிய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோயிலுக்குள் செல்போன், கேமரா, கைப்பை என எந்த பொருளும் எடுத்து செல்ல கூடாது என பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துக்கு தடை
மேலும், கோயிலின் ரத வீதிகளில் அரசு பேருந்து உள்ளிட்ட அனைத்து வாகன போக்குவரத்தும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தே வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பக்தர்களுக்கு கட்டுப்பாடு
ரத வீதிகளில் உள்ள வீடுகள், தங்கும் விடுதிகள், கடைகளுக்கு வருபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கொடி அணிவகுப்பு
ராமேஸ்வரம் கோயிலில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பாதுகாப்பினை தொடர்ந்து, நேற்று ஆயுதம் தாங்கிய போலீஸாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

வாடகை வாகனங்கள்
பாதுகாப்பு என்ற பெயரில் ரதவீதிகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்டோ, வேன், மற்றும் சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாத்ரீகர்கள் பாதிப்பு
இதனால் சொந்த வாகனங்களில் ராமேஸ்வரம் வருபவர்களை தவிர்த்து ரயில் மற்றும் பேரூந்துகளில் ராமேஸ்வரம் வரும் யாத்திரைவாசிகள், உள்ளூர்வாசிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆயுதப்படை போலீசார்
கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு கம்பெனி ஆயுதப்படை போலீசார், 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications