பெங்களூரில் சிறுமிகளைக் கடத்தி, கற்பழித்து வந்த காமக்கொடூரன் கைது
பெங்களூர்: குழந்தைகளாக பார்த்து கற்பழித்து வந்த நபரை பெங்களூர் போலீசார் இன்று கைது செய்தனர்.
பெங்களூரைச் சேர்ந்த 30 வயது நபர் ஒருவர் 6 முதல் 10 வயது வரை உள்ள சிறுமிகளாக பார்த்து கடத்தி, கற்பழித்து வந்தார். அவர் தொடர்ந்து கற்பழிப்பில் ஈடுபட்டபோது அவர் மீது ஒரு கற்பழிப்பு வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தது. மீதமுள்ளவை கடத்தல் வழக்குகளாக பதிவானது.
அந்த நபர் சிறுமிகளை கடத்தி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கொண்டு சென்று கற்பழித்து வந்துள்ளார். அதன் பிறகு சிறுமிகள் எப்படியோ வீட்டுக்கு வந்து சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில் அந்த நபரை பெங்களூர் போலீசார் இன்று கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் தான் 31 சிறுமிகளை கடத்தியதாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
கற்பழிப்பு தவிர அவர் பைக்குகள், நகை, பணம் உள்ளிட்டவற்றை திருடியது, பலரை ஏமாற்றியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 16 சிறுமிகளை கடத்தியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.