'ஆபரேசன் மலை': பிடிப்பட்டது ஒன்றைக் கொம்பனும்… தலைவியும்… 4 யானைகள் எஸ்கேப்!
திருவண்ணாமலை : ஆபரேசன் மலை திட்டத்தின் மூலம் திருவண்ணாமலை அருகே குடியிருப்புகளுக்குள் அட்டாகாசம் செய்த 2 யானைகள் நேற்று இரவு துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.
திருவண்ணாமலை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் தொடர்ந்து அட்டகாசம் செய்துவரும் 6 காட்டு யானைகளையும், மயக்க ஊசி செலுத்தி, கும்கி யானைகளின் உதவியுடன் பிடித்து முதுமலை மற்றும் ஆனை மலை முகாம்களுக்கு கொண்டு செல்லும் ஆபரேஷன் மலை திட்டம் திங்கட்கிழமை தொடங்கியது. அதற்காக மேற்கொண்ட முயற்சிகள் பயன்தரவில்லை, யானைகள் காட்டுக்குள் ஓடியதை அடுத்து இத்திட்டம் கைவிடப்பட்டது.
செவ்வாய்கிழமை மாலை 5.15 மணியளவில் கீழ்ராவந்தவாடி காப்புக்காட்டில் இருந்து வெளியேறி 6 யானைகளும் கரும்பு தோட்டத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தது. அப்போது மறைவாக இருந்து மருத்துவ குழுவினர் துப்பாக்கி மூலம் டெல்லியில் இருந்து கொண்டு வரப்பட்ட மயக்க ஊசியை யானைகளுக்கு செலுத்த ஆரம்பித்தனர்.
ஒற்றைக் கொம்பன்
ஒற்றைக்கொம்பன் என்று அழைக்கப்படும் ஆண் யானை மற்றும் யானைக்கூட்டத்தை வழிநடத்தி சென்ற பெண் யானை மீது மயக்க ஊசி பாய்ந்தது. அந்த இரண்டு யானைகளும் அங்கும் இங்கும் சிறிது ஓடின. சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு லேசான மயக்கத்தில் ஒரே இடத்தில் நின்றுவிட்டது.
கும்கிகள் அட்டாக்
யானைகளுடன் வந்த இரண்டு குட்டி யானைகளும் பெண் யானையை சுற்றி சுற்றி வந்தன. மற்ற இரண்டு யானைகளும் திகைத்துப்போய் நின்றன. இந்த நிலையில் வெளியே இருந்த கும்கி யானைகள் சுஜை, விஜை, வாசன் ஆகியவை மயக்க நிலையில் நின்று கொண்டிருந்த யானைகளை நோக்கி வேகமாக வந்தன.
காட்டுக்குள் எஸ்கேப்
கும்கி யானை களை பார்த்ததும் இரண்டு குட்டி யானைகளும், இரண்டு பெரிய யானைகளும் வேகமாக காட்டுக்குள் ஓடிச்சென்று மறைந்துகொண்டன.
மழையால் பாதிப்பு
இதற்கிடையே மயக்க நிலையில் இருந்து இரண்டு யானைகளும் கும்கி யானைகளின் உதவியுடன் காட்டில் உள்ள மரத்தில் இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டு கட்டி வைக்கப்பட்டது. இதற்குள் பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. இதனால் காட்டுக்குள் தப்பிச் சென்ற மற்ற 4 யானை களையும் பிடிக்கும் பணி இன்று தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மின்சாரம் துண்டிப்பு
நேற்று பகல் 1 மணியில் இருந்து தண்டராம்பட்டு , தானிப்பாடி சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மயக்க ஊசி செலுத்தப்பட்ட யானைகள், தாறுமாறாக ஓடி மின் கம்பங்களில் மோதும் வாய்ப்பு உள்ளதால், அந்த பகுதியில் மின்சாரம் முழுவதுமாக துண்டிக்கப் பட்டது.
மயக்க மருந்து
கடந்த 2 நாட்களாக வீடியோ மூலம் யானைகளை மருத்துவ குழுவினர் படம் எடுத்தனர். அதைத்தொடர்ந்து, அவற்றை கம்ப்யூட்டரில் பதிவு செய்து தோராய எடை மற்றும் வயது கணக்கிடப்பட்டது. அதன் அடிப்படையில், ஒவ்வொரு யானைக்கும் தகுந்தபடி மயக்க மருந்துகள் செலுத்தப்பட்டது.
அரசு நித உதவி
ஆபரேஷன் மலை திட்டத்துக்கு தமிழக அரசு ரூ. 73 லட்சம் நிதி ஒதுக்கி உள்ளது. யானைகளை பிடிப்பதை பார்க்க ஆயிரக்கணக்கில் திரண்ட மக்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.