இங்கு திருமணம் கழிவறையில் தான் நிச்சயிக்கப்படுகிறது
போபால்: மத்திய பிரதேசத்தில் மாப்பிள்ளை வீட்டில் கழிவறை இருந்தால் தான் திருமணம் நடக்கும் என்ற நிலையாகிவிட்டது.
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயம் ஆவது என்பது பழமொழி. திருமணம் என்பதை கழிவறையை வைத்து நிச்சயம் செய்வது என்பது மத்திய பிரதேச மொழி.
மணமகனின் வீட்டில் கட்டாயம் கழிவறை இருக்க வேண்டும் என்றும், அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்து அதை அதிகாரிகளிடம் காட்டி ஒப்புதல் பெற்ற பிறகே திருமணம் செய்து கொள்ள முடியும் என்றும் நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதிய சட்டம் உள்ளது.
செஹோர்
மத்திய பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டத்தில் திருமணம் செய்துகொள்ள விரும்பும் நபர் தனது வீட்டில் உள்ள கழிவறையில் நின்று போட்டோ எடுத்து அதை அதிகாரிகளிடம் காண்பிக்காவிட்டால் அவருக்கு திருமணத்திற்கான தகுதி இல்லை என்று அறிவிக்கப்படும் என்ற சட்டம் உள்ளது.
எதற்கு இந்த சட்டம்?
செஹோர் மாவட்டத்தில் அனைத்து வீடுகளிலும் கழிவறைகள் கட்டாயம் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்த புதிய சட்டமாம்.
சின்னப்புள்ள தனமா இல்லை
கழிவறை இருந்தால் தான் திருமணம் என்பது சின்னப்புள்ள தனமா இல்லையா என்று வெளிநாட்டவர் நம்மை பார்த்து கூற முடியாது. ஏனென்றால் வெளிநாட்டில் நடக்கும் ஒரு கூத்துடன் ஒப்பிடுகையில் இது எவ்வளவோ மேல்.
ஜெர்சி
பிரான்ஸ் கடற்கரை அருகே உள்ள தீவான ஜெர்சியில் இருப்பு சான்றிதழ் அதாவது நான் இந்த உலகத்தில் உயிரோடு தான் இருக்கிறேன் என்பதை நிரூபிக்கும் சான்றிதழ் வழங்கும் முறை அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
யோவ், நான் உயிரோட தான் இருக்கேன்யா
பியர்ரி என்பவர் இருப்பு சான்றிதழ் வாங்க அரசு அலுவலகத்திற்கு சென்றுள்ளார். ஆனால் அவருக்கு சான்றிதழ் வழங்கப்படவில்லை. நான் உங்கள் கண் முன்பு தானே நிற்கிறேன், சான்றிதழ் தந்தால் என்னவென்று அவர் கேட்டுள்ளார். அதற்கு அந்த பொறுப்புள்ள அதிகாரிகள் கூறுகையில், நீங்கள் உலகில் இருப்பதை நிரூபிக்கும் ஆவணத்தில் சாட்சியாக ஒருவர் கையெழுத்திட்டிருக்க வேண்டும் என்றார்களாம்.
நீ உயிரோடு இல்லை
சாட்சி கையெழுத்தில்லாத ஆவணத்தை ஏற்க முடியாது. அதனால் எங்களை பொறுத்த வரை நீங்கள் இறந்தவர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நான் தான் உங்கள் கண் முன்பு உயிரோடு நிற்கிறேனே என்று பியரி கூறியதற்கு அதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டுள்ளார்கள்.