சென்னையில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த மழை... ரமணன் சொன்னது பலித்தது
சென்னை: சென்னையில் நேற்றிரவு கொட்டி தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியது.
இலங்கையில் மேல் அடுக்கில் சுழற்சி உருவாகி உள்ளதால் தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மண்டல இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தது போல மழை பெய்துள்ளது.
சென்னையில் காலை நேரத்தில் வெயில் சுட்டெரித்தது. மாலை நேரத்தில் குளுமையான காற்று வீசியது. இதனைத்தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு மேல் 2 மணிவரை கனமழை கொட்டியது.
வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை சில இடங்களில் பெய்து வருகிறது. இந்த நிலையில் இலங்கை அருகே மேல் அடுக்கில் சுழற்சி உருவாகி உள்ளது. அதன் காரணமாக தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் 30-ந் தேதி வரை 2 நாட்களுக்கு அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது என்று நேற்று ரமணன் தெரிவித்தார். அதேபோல திடீரென்று மழை கொட்டி தீர்த்தது.
தென் சென்னையில் வெள்ளம்
தென் சென்னைப் பகுதிகளில் மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினப்பாக்கம், அடையாறு போன்ற இடங்களில் மழைநீர் சாலை ஓரங்களில் தேங்கியது. கிண்டி மேம்பாலத்தின் கீழேயும் அதிக வெள்ளம் தேங்கியது. சைதாப்பேட்டை, வேளச்சேரி மற்றும் புறநகர் பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. சென்னை நுங்கம்பாக்கத் தில் 42.4 மில்லிமீட்டர்மழை பெய்தது. மீனம்பாக்கதில் மழை அளவு 30.6 மில்லி மீட்டராக பதிவானது.
போக்குவரத்து நிறுத்தம்
வடசென்னையில் பெரம்பூர் ‘பிஅண்ட்சி' மாப் சாலையில் வெள்ளம் தேங்கியது. இதனால் அந்த வழியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
ஏரிப்பகுதிகளில் மழை
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரி பகுதி களிலும் பலத்த பழை பெய்துள்ளது. புழல் ஏரி பகுதியில் 58 மி.மீ, பூண்டியில் 66.6 மி.மீ, மழை பெய்துள்ளது. சோழவரம் 36 மி.மீ., செம்பரம்பாக்கம் 15 மி.மீ, கொரட்டூர் 16 மி.மீ., தாமரைப்பாக்கம் 4 மி.மீ., மழைபதிவாகி இருக்கிறது
விருதுநகர் மாவட்டத்தில்
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ,ஸ்ரீவில்லிபுத்தூர் உட்பட பல இடங்களில்,இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து, மாரியம்மன்கோயில் செல்லும் ரோட்டில் ஓடிய வெள்ளத்தால், வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர். அத்திக்குளம் காலனி பகுதியில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. இது போன்று மாவட்டத்தில் விருதுநகர்,சிவகாசி உள்ளிட்ட பல இடங்களிலும் , இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
பதிவான மழை அளவு
இலுப்பூர் 8 செ.மீ., மதுரை தெற்கு 7 செ.மீ., பெரம்பலூர், விராலிமலை தலா 5 செ.மீ., கடவூர், புதுக்கோட்டை தலா 4 செ.மீ., சித்தம்பட்டி, நடுவட்டம், மேல் அணைக்கட்டு, மருங்காபுரி தலா 3 செ.மீ., கோவிலங்குளம், அரிமளம், தம்மம்பட்டி, கேத்தி, வெண்பாவூர் தலா 2 செ.மீ., கூடலூர் பஜார், அரியலூர், திருமங்கலம், பேரையூர், கமுதி, அருப்புக்கோட்டை, பெனுகொண்டாபுரம், சாத்தூர், மயிலாடுதுறை தலா 1 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.