அஸரம் பாபுவைக் கைது செய்யாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம்!- சிறுமியின் தந்தை
லக்னோ: தன் 16 வயது மகளைச் சீரழித்த சாமியார் அஸரம் பாபுவை 24 மணிநேரத்தில் கைது செய்யாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதமிருப்போம் என்று சிறுமியின் தந்தை அறிவித்துள்ளார்.
மேலும் ராஜஸ்தான் போலீசார் அஸரம் பாபுவை மிக மென்மையாக நடத்துவதாகவும் சிபிஐ விசாரணை தேவை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
ஜோத்பூரில் ஆசிரமம் நடத்தி வரும் அஸரம் பாபு தன்னைச் சீரழித்துவிட்டதாக உபியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் புகார் தெரிவித்திருந்தார்.
இந்த புகாரை விசாரிக்க, போலீஸ் நிலையத்தில் ஆஜராக அஸரம் பாபுவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகாமல் சாக்குப் போக்கு சொல்லி வருகிறார். மேலும் முன்ஜாமீன் கேட்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும் அஸரம் பாபு விசாரிப்பதில் போலீசார் பெரிய முனைப்பு காட்டவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இந்த நிலையில், தன் மகளைச் சீரழித்த அந்த போலிச் சாமியாரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், அடுத்த 24 மணி நேரத்தில் கைது செய்யாவிட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாகவும் சிறுமியின் தந்தை அறிவித்துள்ளார்.
மேலும் சாமியாரிடம் ராஜஸ்தான் போலீசார் மிகவும் மென்மையாக நடத்துவதால், வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.