பெங்களூரைச் சுற்றி 8 நகரங்களை மேம்படுத்தி நெரிசலைக் குறைக்க கர்நாடக அரசு பிரமாண்டத் திட்டம்
பெங்களூர்: பெங்களூரில் நிற்கக் கூட இடம் இல்லாத அளவுக்கு ஏகப்பட்ட நெரிசல்.. எங்கு பார்த்தாலும் வாகனங்கள், மக்கள் தலைகள் என்று ஆகி விட்டதால் பெங்களூர் நகரைச் சுற்றிலும் உள்ள 8 சிறு நகரங்களை மேம்படுத்தி அவற்றை குட்டி பெங்களூராக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 2100 கோடியில் பெரும் திட்த்தையும் கர்நாடக அரசு தீட்டியுள்ளது.
இந்த புதிய நகரங்கள் மேம்படுத்தப்பட்ட பின்னர் பெங்களூர் நகரில் கூட்ட நெரிசல் குறைந்து நகரம் மறுபடியும் பழைய பொலிவைப் பெறும் என்று கர்நாடக அரசு நம்புகிறதாம்.
ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவி மற்றும் ஒத்துழைப்புடன் இந்த மாபெரும் திட்டத்தை நிறைவேற்றவுள்ளது கர்நாடக அரசு.

நெலமங்களா முதல் ஹோஸ்கோட் வரை
பெங்களூரைச் சுற்றி உள்ள நெலமங்கஏளா, மகடி, ஆனேகல், பிடுதி, தபஸ்பேட், ஹரோஹள்ளி, தேவனஹள்ளி, ஹோஸ்கோட் ஆகிய நகரங்களைத்தான் மேம்படுத்தி துணை நகரங்களாக்கப் போகிறார்களாம்.

குட்டி பெங்களூராக மாற்றம்
இந்த நகரங்கள் அனைத்தும் குட்டி பெங்களூராக மாற்றப்படும். அதாவது பெங்களூருக்கு வரும் முதலீடுகளை இந்த எட்டு நகரங்களுக்கும் பிரித்து பெங்களூரை நெரிசலிலிருந்து மீட்கப் போகிறார்களாம்.

மின்சார ரயிலும் வருகிறது
இதேபோல பெங்களூரில் புறநகர் மின்சார ரயில் திட்டத்தையும் கொண்டு வரத் திட்டமிப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 8759 கோடியில் திட்டமிடப்பட்டுள்ளது. பெங்களூரிலிருந்து தும்கூர், ராம்நகர், பங்காருப்பேட்டை ஆகியவை இந்த மின்சார ரயில் மூலம் இணைக்கப்படும்.

பெங்களூ்ர் புறநகர் ரயில் கழகம்
இதற்காக பெங்களூர் புறநகர் ரயில் கழகம் உருவாக்கப்படும். இந்த கழகமே ரயில் திட்டத்தை நிறைவேற்றும்.

மாநகராட்சிகளாகும் தும்கூர், ஷிமோகா, பீஜப்பூர்
மேலும் தும்கூர், ஷிமோகா மற்றும் பீஜப்பூர் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படவும் உள்ளதாக அரசுத் தரப்பி்ல தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெல்காம், குல்பர்காவில் 24 மணி நேரமும் நல்ல தண்ணீர்
அதேபோல பெல்காம், குல்பர்கா, ஹூப்ளி-தார்வாட் ஆகிய மாநகராட்சிப் பகுதிகளில் 24 மணி நேரமும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்காக ரூ. 1760 கோடி செலவில் புதிய திட்டம் தீட்டப்பட்டுள்ளதாம்.












Click it and Unblock the Notifications