மாயமான நிலக்கரி கோப்புகள்: உரிய நடவடிக்கை எடுக்கப்படும் -மாநிலங்களவையில் பிரதமர் விளக்கம்

நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து, நிலக்கரி சுரங்க முறைகேடு குறித்து மத்தியப் புலனாய்வுத் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. அப்போது, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு தொடர்பான சில கோப்புகளை விசாரணைக்காக கேட்டது மத்திய புலனாய்வுத் துறை.
தேவையான சில முக்கியமான கோப்புகள் காணாமல் போய்விட்டதாக அப்போது நிலக்கரித் துறை அமைச்சகம் தெரிவித்தது பரபரப்பைக் கிளப்பியது. அதனைத் தொடர்ந்து அது குறித்து பிரதமர் விளக்கமளிக்க வேண்டி மாநிலங்களவையில் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தன எதிர்கட்சிகள்.
வழக்கம்போல் இன்றும் மாநிலங்களவையில் நிலக்கரி கோப்புகள் மாயம் ஆனது குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர் எதிர்கட்சி உறுப்பினர்கள். அதனைத் தொடர்ந்து அவை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னர் அவை தொடங்கியதும், மீண்டும் இந்த பிரச்சினையை முன்வைத்தனர் எதிர்கட்சிகள். அதனைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங் நிலக்கரி கோப்புகள் மாயம் தொடர்பாக விளக்களித்தார்.
அப்போது அதுகுறித்து மன்மோகன் சிங் கூறியதாவது, ‘நிலக்கரி ஒதுக்கீடு ஆவணங்கள் காணாமல் போன விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்படும்.ஆவணங்கள் காணாமல் போன விவகாரத்தில் அரசு எதையும் மறைக்கவில்லை.நிலக்கரி துறை அமைச்சர் இது தொடர்பாக ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளார்.குற்றம் புரிந்தது கண்டறியப்பட்டால் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என விளக்கமளித்தார்.
ஆனால், பிரதமர் அளித்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்று பாரதீய ஜனதா உறுப்பினர்கள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர்.இதையடுத்து மாநிலங்களவை 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications