குறைந்து போன காற்று… 15 மெகாவாட் மட்டுமே உற்பத்தி: மீண்டும் கடும் மின் வெட்டு அபாயம்
சென்னை: காற்று வீசுவது குறைந்து போனதால் காற்றாலைகள் மூலம் நேற்று 15 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது.
தமிழ்நாடு மின்சார நுகர்வோர்களுக்கு தேவையான மின்சாரத்தில் காற்றாலைகளின் பங்கும் முக்கிய பங்கை வகிக்கிறது. ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்டு ஆகிய 3 மாதங்கள் மட்டுமே காற்று வீசும் காலம் என்பதால் இந்த மாதங்களில் மட்டுமே காற்றாலைகள் அதிகபட்சமாக 4 ஆயிரம் மெகாவாட் வரை மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. இதனால் இந்த 3 மாதங்களையும் ‘‘பீக் லோடு'' மாதம் என்கின்றனர். மீதம் உள்ள 8 மாதங்களில் காற்றாலைகளால் பெரிய அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதில்லை. தற்போது காற்றாலைகளில் மின்உற்பத்தி குறைந்து விட்டது.

இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன்பாகவே சீசன் தொடங்கிவிட்டதால் மே மாதங்களிலேயே காற்றாலைகள் ஓரளவு மின்சார உற்பத்தி செய்தது. இதே நிலை நீடிக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், தொடர்ந்து ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் மின்சார உற்பத்தி இருந்தது.
ஆகஸ்டு மாதம் இறுதியிலேயே காற்றாலைகளின் உற்பத்தி குறைந்தது. மூன்று இலக்க எண்களில் மின்சார உற்பத்தி செய்து வந்த காற்றாலைகள், தற்போது காற்று இல்லாததால் இரண்டு இலக்கத்தில் உற்பத்தி செய்கின்றன.
நேற்று அதிகாலை 1.50 மணிக்கு 71 மெகாவாட்டும், காலை 7.50 மணிக்கு 15 மெகாவாட்டும் உற்பத்தி செய்துள்ளது. ஆக காற்றாலை மின்சாரம் காலைவாரிவிட்டுள்ளது. மாற்று மின்உற்பத்தி நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை கொண்டு மின்நுகர்வோர்களுக்கு மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்றார்.
காற்றாலை மின் உற்பத்தி குறைந்துள்ளதால் தமிழ்நாட்டில் மீண்டும் மின்வெட்டு பிரச்சினை தலைதூக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications