தேமுதிக மாவட்ட செயலர்களை அலறவைத்த விஜயகாந்தின் ரூ. 50 லட்சத்து 55 ஆயிரம் 'ஆர்டர்!
சென்னை: லோக்சபா தேர்தலுக்கு ஒவ்வொரு மாவட்ட செயலரும் ரூ50 லட்சம் ரூபாய் வசூல் செய்தாக வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் கட்டளையால் கதிகலங்கிப் போயுள்ளனர் அக்கட்சி நிர்வாகிகள்.
சென்னையில் நடைபெற்ற தேமுதிக தலைமை செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட செயலர்கள் ஊர் திரும்பும் போது இருண்ட முகத்துடனேயே செல்ல நேர்ந்தது.
திமுகவோட கூட்டணி இல்லை!
தேமுதிக செயற்குழுவில் முதலில் கூட்டணி பற்றி விவாதிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் திமுகவுடன் அணி சேர வேண்டும் என்று பேசிய எம்.எல்.ஏ ஒருவரை விஜயகாந்த் கடுமையாக சாடியிருக்கிறார். என் மண்டபத்தையே இடிச்சவங்க.. அவங்களோடயா கூட்டணி? என்றும் எகிறியிருக்கிறார்.
ரூ50 லட்சம் கட்டாயம்
இதைத் தொடர்ந்து உஷ்ணத்தில் இருந்த விஜயகாந்த், லோக்சபா தேர்தல் வருவதால் அனைத்து மாவட்ட செயலர்களும் தலா ரூ50 லட்சம் வசூல் செய்து கட்டாயம் கட்சிக்கு கொடுக்க வேண்டும் என்று அதிரடியாக சொல்லியிருக்கிறார்.
ரூ 55 ஆயிரத்துக்கு ஸ்கூட்டி
இந்த அதிர்ச்சியில் இருந்து தேமுதிக நிர்வாகிகள் மீள்வதற்குள்ளாகவே தன்னுடைய பிறந்த நாளை ஒட்டி மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டி வாங்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மாவட்ட செயலரும் ரூ55 ஆயிரம் கொடுத்து அந்த ஸ்கூட்டியை வாங்கிக் கொண்டு 'யாருக்கு வேண்டுமானாலும்' கொடுக்கலாம் என்று மற்றொரு கட்டாய உத்தரவும் இந்த செயற்குழுவில் போடப்பட்டது.
திணிக்கப்பட்ட டொனேஷன் புத்தகங்கள்
இந்த 50 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் விவகாரத்தால் குமுறிப் போன மாவட்ட செயலர்கள், எதுக்குத்தான் இந்த பதவியில் இருக்கிறோம் என்று தலையில் அடிக்காத குறையாக புலம்பியபடி வெளியேறினர். மறக்காமல் தேமுதிக தலைமைக் கழக நிர்வாகிகள் ஒவ்வொரு மாவட்ட செயலர் கையிலும் கட்டாயமாக டொனேஷன் புத்தகங்களை திணித்துள்ளனர்.
இந்த கெடுபிடிகளால் தேமுதிகவில் அடுத்த சலசலப்புகள் விரைவில் அரங்கேறவும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது,