தி.மு.க.வில் இணைந்தார் ஆஸ்டின்!

தே.மு.தி.க. மாநில துணை செயலாளராக இருந்தவர் ஆஸ்டின். நாகர்கோவிலை சேர்ந்த இவர் எம்.பி., எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தவர். விஜயகாந்த் தே.மு.தி.க.வை தொடங்கிய போது கட்சியில் சேர்ந்த இவருக்கு மாநில பொறுப்பு வழங்கப்பட்டது.
ஆனால், கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டதையடுத்து கடந்த 23-ந் தேதி தே.மு.தி.க.வில் இருந்து விலகினார். ஆஸ்டினுக்கு ஆதரவாக குமரி மாவட்ட தே.மு.தி.க.வில் இருந்து முக்கிய நிர்வாகிகள் சிலரும் ராஜினாமா செய்தனர். அடுத்ததாக எந்த கட்சியில் சேரலாம் என்பது குறித்து ஆஸ்டின் தனது ஆதரவாளர்களுடன் நாகர்கோவிலில் ஆலோசனை நடத்தினார். அப்போது தி.மு.க.வில் சேர வேண்டும் என்று ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து ஆஸ்டின் இன்று கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். அவருடன் தே.மு.தி.க.வில் இருந்து விலகிய கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள் ராஜலிங்கம், தாமோதரன் உள்பட பலர் தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களை கருணாநிதி வரவேற்றார்.
அதுபோது தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், துணைப் பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், வி.பி.துரைசாமி, முன்னாள் அமைச்சர் க.பொன்முடி, அமைப்புச் செயலாளர் பெ.வீ.கல்யாண சுந்தரம், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் சுப்புலட்சுமி ஜெகதீசன், கன்னியாகுமரி மாவட்டக் கழகச் செயலாளர் என். சுரேஷ்ராஜன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் எப்.எம்.ராஜரத்தினம், ஒன்றியச் செயலாளர் சற்குருகண்ணன், குமரி மணிமாறன் ஆகியோர் உடனிருந்தனர்.
அதிமுக - தேமுதிக - திமுக
ஆரம்பத்தில் ஆஸ்டின் அ.தி.மு.க.வில் இருந்தபோது ராஜ்யசபா எம்.பி.யாக பதவி வகித்தார். அதன்பிறகு 1997-ல் திருநாவுக்கரசு தொடங்கிய எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வில் சேர்ந்தார்.
2001-ல் நடந்த தேர்தலில் நாகர்கோவில் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார்.திருநாவுக்கரசு கட்சியை கலைத்து விட்டு பாரதீய ஜனதாவுக்கு சென்றதால் ஆஸ்டின் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார்.
2006 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் நாகர்கோவில் தொகுதிக்கு சீட் கேட்டார். அது கிடைக்காததால் அவர் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார்
அதன்பிறகு விஜயகாந்த் தே.மு.தி.க.வை தொடங்கியதும் ஆஸ்டின் அதில் இணைந்து பணியாற்றி வந்தார். இப்போது திமுகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications