கருணாநிதி மீது ஜெயலலிதா புதிய அவதூறு வழக்கு!
சென்னை: முரசொலியில் செய்தி வெளியிட்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மாநகர அரசு வழக்கறிஞர் ஜெகன் இன்று அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
அதில், கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி முரசொலி நாளிதழில் முதல்வர் ஜெயலலிதாவை பற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதி அவதூறாக செய்தி வெளியிட்டுள்ளார்.
இந்த செய்தி, தமிழக அரசுக்கும், முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது. இதனால், கருணாநிதி, செய்தி வெளியிட்ட முரசொலி ஆசிரியர் ஆகியோர் மீது அவதூறு வழக்கின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

ஏற்கனவே கருணாநிதி மீது நான்கு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
அமைச்சர்கள் வழக்கு
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி முரசொலியில் வெளிவந்த கேள்வி பதிலில் அமைச்சரின் உறவினர்கள் மூலம் பைல்கள் கிளியர் செய்வது நடக்கிறது என்று கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து, வீட்டு வசதித்துறை அமைச்சர் வைத்தியலிங்கம், மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் தனித்தனியே திமுக தலைவர் கருணாநிதி மற்றும் முரசொலி செல்வம் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தனர்.
விஸ்வரூபம் வழக்கு
இதேபோல், 'விஸ்வரூபம்' படம் தொடர்பான பிரச்னை குறித்து கலைஞர் கடிதத்தில் 'வெளியே வந்துவிட்டது பூனைக்குட்டி' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளிவந்தது. இது முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக கருணாநிதி, முரசொலி செல்வம் மீது மாநகர அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் முதல்வர் சார்பில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இதேபோல், 'விஸ்வரூபம்' தொடர்பாக இந்து நாளிதழில் வெளிவந்த செய்தியின் அடிப்படையில் கருணாநிதி மற்றும் இந்து ஆசிரியர், பதிப்பாளர் ஆகியோர் மீதும் முதல்வர் சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்த 4 வழக்குகளும் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது 5 வழக்கு தொடரப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications