சார் மாஸ்க்கை எடுங்க.. உங்க முகத்தை பார்க்க ஆசையா இருக்கு.. பெண்ணின் "கோரிக்கை"யை ஏற்ற முதல்வர்
ஒசூர்: முதல்வர் ஸ்டாலினின் கான்வாயை நிறுத்திய பெண் ஒருவர் முகக்கவசத்தை எடுக்குமாறும் முகக் கவசம் இல்லாமல் உங்கள் முகத்தை பார்க்க ஆசையாக இருப்பதாகவும் கூறியதை அடுத்து ஸ்டாலின் முகக் கவசத்தை எடுத்து காண்பித்தார்.
Recommended Video
திமுக ஆட்சியில் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை செயல்படுத்துகிறது. இது இன்றைய தினம் கிருஷ்ணகிரி மாவட்ட கிராமங்களில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த திட்டத்தை தொடங்கி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் ஒசூர் சென்றடைந்தார். பின்னர் ஒசூரில் ஹோட்டலில் தங்கிய முதல்வர் இன்று காலை சூளகிரி சென்றார். அங்கு சாமனப்பள்ளி கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தொடங்கிவைத்தார்.

தளி நிகழ்ச்சி
இதையடுத்து அவர் தளி உள்ளிட்ட இடங்களில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு இன்று சென்னை திரும்புகிறார். இந்த நிலையில் அவர் ஒசூரில் நிகழ்ச்சியை முடித்து கொண்டுவிட்டு காரில் வந்துகொண்டிருந்தார். அப்போது அவரது கான்வாயை ஒரு பெண் நிறுத்தினார்.

மாஸ்க் நீக்கம்
அப்போது முதல்வர் என்னம்மா என கேட்க மாஸ்க்கை எடுங்க சார். நாங்க எப்ப உங்க முகத்தை பார்க்கிறது? ஒரு டைம் பார்க்கிறோம், எடுங்க சார் , ரொம்ப வருஷமா உங்களை பார்க்க ஆசையா இருக்கோம் என கூறினார். இதையடுத்து ஸ்டாலினும் மாஸ்க்கை எடுத்தார். அப்போது அந்த பெண் விடாமுயற்சி விஸ்வரூப முயற்சி, அதற்கு பெயரே ஸ்டாலின் சார் என தெரிவித்தார்.

மனுவை பெற்ற ஸ்டாலின்
பின்னர் அந்த பெண் பாதுகாப்பு அதிகாரியிடம் கேட்டுக் கொண்டு ஒரு மனுவை முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்தார். இந்த சம்பவத்தால் அந்த பெண் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இதையடுத்து முதல்வரின் வாகனம் அந்த இடத்திலிருந்து கிளம்பியது. இது போல் டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க கடந்த மாதம் சேலம் சென்றிருந்தார் ஸ்டாலின்.

விருந்தினர் மாளிகைக்கு அருகே கோரிக்கை மனு
அப்போது அவர் தங்கியிருந்த ஒரு விருந்தினர் மாளிகைக்கு அருகே வாசலில் நின்றிருந்தவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இதையடுத்து அஸ்தம்பட்டி ரவுண்டானா பகுதியில் காத்திருந்த தூய்மை பணியாளர்களை பார்த்த அவர் காரில் இருந்து இறங்கி நலம் விசாரித்து பின்னர் கோரிக்கை மனுக்களை பெற்றார். முகக் கவசம் அணிந்து கொண்டு கவனமாக பணிபுரிய வேண்டும் என அறிவுறுத்தினார்.

சாலையோரம் கோரிக்கை மனு
அது போல் அழகாபுரம் சாலையோரம் கோரிக்கை மனுவுடன் நின்ற மாற்றுத்திறனாளி பெண்ணை பார்த்த முதல்வர் காரில் இருந்து இறங்கி அந்த பெண்ணிடம் கோரிக்கை மனுவை பெற்றார். அது போல் மேட்டூரைச் சேர்ந்த சவுமியா என்ற பெண் தான் அணிந்திருந்த இரண்டு பவுன் தங்கச் சங்கிலியை முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினார். பிஇ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ள அவர் தனக்கு வேலை கேட்டு முதல்வரிடம் மனு கொடுத்தார்.

ட்விட்டரில் பதிவு செய்த ஸ்டாலின்
இதுகுறித்து ட்விட்டரில் பதிவு செய்த ஸ்டாலின் வறுமையிலும் தங்க செயினை கொடுத்த பொன்மகளுக்கு படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்திருந்தார். இதையடுத்து மேட்டூர் அருகே பொட்டனேரியில் உள்ள ஜே.எஸ்.டபிள்யூ எனும் தனியார் நிறுவனத்தில் பணி நியமனத்துக்கான ஆணையை அந்த பெண்ணின் வீட்டிற்கே சென்று கொடுத்தார் அமைச்சர் செந்தில்பாலாஜி. இது போல் முதல்வர் செல்லும் இடங்களில் பொதுமக்களுக்கு மதிப்பு கொடுத்து அவர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கிறார்.












Click it and Unblock the Notifications