நான் உடை மாற்றி கொண்டிருந்தப்போ, படுக்கை அறை ஜன்னலை போலீஸ்காரர் தட்டினார்.. பாஜக நடிகை ரஞ்சனா ஆவேசம்
சென்னை: நான் உடை மாற்றிக் கொண்டிருந்த போது என் படுக்கை அறை ஜன்னலை ஆண் போலீஸ்காரர் ஒருவர் தட்டினார் என நடிகை ரஞ்சனா நாச்சியார் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு நிர்வாகி நடிகை ரஞ்சனா நாச்சியார். இவர் நேற்று குன்றத்தூர் வழியாக சென்றுக் கொண்டிருந்தார். அப்போது குன்றத்தூர்- போரூர் செல்லும் அரசு பேருந்தில் மாணவர்கள் படிக்கட்டை தாண்டியும் தொங்கிச் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த பேருந்தை வழிமறித்த நடிகை ரஞ்சனா, டிரைவரிடம் சரிமாரி கேள்விகளை எழுப்பினார். பேருந்தில் இப்படி பயணிப்பவர்களை நீங்கள் செருப்பால் அடித்திருக்கலாமே! அங்க பாருங்க ஒருத்தன் மேல் ஏறுகிறான் என்றார்.

உடனே பேருந்தின் பின்வாசலுக்கு சென்ற ரஞ்சனா, அங்கு படியில் இருந்த மாணவர்களை இறங்குடா, இறங்குடா நாயே என அழைத்து வெளியே தள்ளினார். வர மறுத்த மாணவர்களை தலையிலும் கன்னத்திலும் ஓங்கி அடித்து கீழே இறக்கினார். பின்னர் நடத்துநரை பார்த்து ஒருமையில் உனக்கு அறிவு இல்லையா, இப்படி படியில் தொங்குவதை பார்த்துக்கிட்டு இருக்கே, அறிவு கெட்ட நாயே என திட்டினார்.
நடிகை ரஞ்சனாவின் நோக்கம் சரி என்றாலும் அதை அவர் கையாண்ட விதம் தவறு என்று கூறுகிறார்கள், மாணவர்களை கீழே இறக்கியதுடன் நிறுத்திக் கொள்ளாமல் அவர்களை அடித்ததும், நாயே என பேசியதும் கன்டக்டரை ஒருமையில் பேசியது போன்ற செயல்கள்தான் அவரது நல்ல நோக்கத்திற்கு நெகட்டிவாக உள்ளன என்கிறார்கள்.
இந்த நிலையில் போக்குவரத்து ஊழியர் சரவணன் அளித்த புகாரின் பேரில் மாங்காடு போலீஸார், கெரும்பாக்கத்தில் உள்ள நடிகை ரஞ்சனா வீட்டிற்கு சென்று போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவரை போலீஸார் கைது செய்வதாக தெரிவித்தனர். இதனால் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ரஞ்சனா கூறுகையில் என் படுக்கை அறையில் நான் உடைமாற்றி கொண்டிருந்தேன்.
அப்போது ஒரு ஆண் போலீஸ் வந்து என் அறையின் ஜன்னல் கதவை தட்டுகிறார். ஏன் நாங்கள் கதவை திறக்கும் வரை காத்திருக்க மாட்டீர்களா என கேட்டார். இதையடுத்து போலீஸாரிடம் வாரண்ட் இருக்கிறதா என்றார், அதற்கு எஃப்ஐஆர் காப்பி பதிவாகிவிட்டது என்றனர். உடனே எஃப்ஐஆர் காப்பியை காட்டுங்கள் என்றதுக்கு , நீங்கள் முதல்ல வாங்க என போலீஸார் அழைத்தனர்.
பிறகு என் காரிலேயே வருகிறேன் என்றார், அதற்கு மறுத்தனர். வேண்டுமானால் என் காரில் போலீஸாரும் வரட்டும் என ரஞ்சனா கூறினார். போலீஸார் உங்களுடன் வருவார்கள் மேடம், ஆனால் நீங்கள் எங்கள் வண்டியில்தான் வர வேண்டும், நாங்கள் உங்களை கைது செய்வதால் வேறு வாகனத்தில் வருவதற்கு அனுமதி இல்லை என்றனர். மேலும் ரஞ்சனா என்னை குற்றவாளி போல் நடத்தி அராஜகம் செய்கிறீர்களே. என் வண்டியில் வந்தால் என்ன , நான் ஸ்டேஷனுக்கு வருகிறேன், வழக்கை சந்திக்கிறேன் என்றார்.
அப்போது பெண் போலீஸார் நாங்கள் உங்களுடன் எங்கள் வாகனத்தில் வருகிறோம். பிறகு ஏன் பயப்படுறீங்க என்றார். அதற்கு ரஞ்சனா, நான் பயப்படவில்லை என சிரித்தபடியே கேட்டார். பிறகு திடீரென உள்ளே சென்ற அவர் தனது தாயிடம் பேச வேண்டும் என்றார், ஆனால் போலீஸார் அவரை இழுத்துச் சென்றனர். அப்போது பசங்க படிக்கட்டில் பயணம் செய்யுறது சரி, தட்டி கேட்டது தவறா என கேட்டார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு எழுந்தது.












Click it and Unblock the Notifications