"கஸ்தூரியை கைது செய்தது தவறு.. ஜெயிலில் போடும் அளவுக்கு அவர் என்ன தப்பு செய்தார்.." சீறும் சீமான்
அரியலூர்: தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரியை ஹைதராபாத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவர் இப்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே கஸ்தூரி கைதை கண்டித்துள்ள நாம் தமிழர் சீமான், அவர் கைது செய்யும் அளவுக்குப் பெரிய குற்றமா செய்துவிட்டார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் நடந்த போராட்டம் ஒன்றில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி அப்போது தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சில சர்ச்சை கருத்துகளைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மீது தமிழகத்தில் பல இடங்களில் புகார் அளிக்கப்பட்டது.

கஸ்தூரி: இந்தச் சூழலில் நடிகை கஸ்தூரி முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். இருப்பினும், நீதிமன்றம் அவரது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவரை கைது செய்யத் தனிப்படை அமைக்கப்பட்டது. ஹைதராபாத்தில் நடிகை கஸ்தூரியை கைது செய்த போலீசார், அவரை சென்னை அழைத்தனர். எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் அவரை ஆஜர்படுத்திய நிலையில், நவ.,29ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி கஸ்தூரி இப்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அரியலூர் மாவட்டம் அனணக்குடம் கிராமத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி சீமான், நடிகை கஸ்தூரியை தனிப்படை அமைத்து கைது செய்யும் அளவிற்கு என்ன தவறு செய்தார். எனக் கேள்வி எழுப்பினார். இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "இந்த கைது அவசியமற்றது.. அவரது பேச்சில் காயம்படவோ, வேதனைப்படவோ எதுவும் இல்லை.. வேண்டும் என்றே பழிவாங்க இப்படிச் செய்கிறார்கள்..
தேவையில்லை: கஸ்தூரி பேசியதில் காயம் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள்.. கடந்த நூற்றாண்டு முழுக்க தமிழ் பேரினத்தை, திராவிடம் என்று இங்கு ஒரு தரப்பு சொல்லி வருகிறது. அப்படியென்றால் அதைக் கேட்டு நாங்கள் எந்தளவுக்குக் காயம் பட்டு இருப்போம். எனது அடையாளத்தை மறைத்து எனது இனத்துக்கு வேறு ஒரு பெயர் வைக்க நீங்கள் யார்? அதில் எங்களுக்கு எவ்வளவு தூரம் காயம் ஏற்பட்டு இருக்கும். கஸ்தூரியை கைது செய்திருக்கத் தேவையில்லை.. சிறைப்படுத்தும் அளவிற்கு இது என்ன குற்றமா?
திமுகவினர் பேசுவதை எல்லாம் கேட்கிறார்கள் இல்லையா? ஒருவருடன் கருத்தியல் ரீதியாகச் சண்டை போடுவதும், அரசியல் செய்வதும் வேறு.. ஆனால், திமுகவினர் தனிப்பட்ட முறையில் விமர்சித்து வருகிறார்கள். குடும்பங்களைப் பற்றி, தாய்= தந்தையரைப் பற்றி, பிறப்பைப் பற்றிக் கூட பேசியிருக்கிறார்களே.. அதற்கெல்லாம் இவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்.
பெரிய குற்றம் இல்லை: அவசர அவசரமாகத் தனிப்படை அமைத்து கைது செய்யும் அளவுக்கு அவர் செய்தது அவ்வளவு பெரிய குற்றமா? அவர் ஏதோ பேசிவிட்டார். அது தவறுதான். ஆனால், அதற்குத் தான் அவர் மன்னிப்பும் கேட்டுவிட்டாரே.. மன்னிப்பு கேட்டால் விட வேண்டியது தானே.. ஒரு பெண்ணை அவசர, அவசரமாக வேறு மாநிலத்திற்குச் சென்று கைது செய்து வருவது ஏன்.. அது என்ன அவ்வளவு பெரிய குற்றமா?
இங்கே மலையை வெட்டி எடுப்பவன், மணல் கடத்தல் செய்பவன், ஊழல்வாதிகள், கொள்ளை அடிப்பவன் எல்லாம் எல்லாம் வெளியே தான் இருக்கிறான். அப்படியிருக்கும் போது கஸ்தூரியை மட்டும் தனிப்படை அமைத்து கைது செய்தது உள்நோக்கம் கொண்டது மாதிரி தான் தெரிகிறது. இது பழிவாங்கும் நடவடிக்கை" என்று அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications