போலி பத்திரம்.. அரியலூர் போன "விருந்தாளி".. நில மோசடியில் சிக்கிய ரியல் எஸ்டேட் நபர்.. கோர்ட் நறுக்
அரியலூர்: அரியலூர் விவசாயிடம் நிலமோசடி செய்த, ரியல் எஸ்டேட் அதிபரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி கொண்டிருக்கிறார்கள்.
மோசடி பத்திரம் என்பது சொத்தின் உண்மையான உரிமையாளரை, ஏமாற்றிவிட்டு, அந்த சொத்தின் மீது எந்தவித உரிமையும் இல்லாத ஒரு நபர் மூலம் ஆள்மாறாட்டம் செய்து பத்திரபதிவு செய்தால் அதைத்தான் மோசடி பத்திரம் என்பார்கள்.

மோசடி பத்திரம்: அதாவது, போலியாக ஒரு உரிமை ஆவணத்தை தயார் செய்து, அந்த போலி ஆவணத்தை அடிப்படையாக கொண்டு ஒரு சொத்துரிமையை மாற்றம் செய்தால், அந்த பத்திரத்தின் பெயரும், மோசடி பத்திரம்தான். போலியாக பட்டா தயாரித்தால், அதுவும் மோசடி பத்திரம் என்றே கருதப்படும்.
இப்படி நிலமோசடி எங்குமே நடந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. எனினும், ஆங்காங்கே மோசடி காரணமாக அதிகாரிகளே கைதாகி வருகிறார்கள். இன்றுகூட நிலமோசடிக்காக, சென்னையில் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி சிறப்பு தாசில்தார் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவரும், நிலமோசடியால் வசமாக சிக்கியிருக்கிறார்.
நிலமோசடி: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சிதம்பரம் சாலையை சேர்ந்தவர் செல்வமணி.. 53 வயதாகிறது.. இவர் ரியல் எஸ்டேட் செய்துவந்தவர். ஆனால், அதைவிட்டுவிட்டு, இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்.
செல்வமணிக்கு, சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த கணேசன் என்பவர் நட்பாகியிருக்கிறார்.. கணேசனும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாக சொல்லி உள்ளார்.. எனவே, செல்வமணி தன்னுடைய 7 கோடியே 20 லட்சம் மதிப்பிலான இடத்தை கணேசனுக்கு விற்பதற்காக பேசியுள்ளார்.
கணேசன்: கணேசனும் அந்த இடத்தை வாங்கி கொள்வதாக சொல்லி, 1 கோடியே 40 லட்சம் ரூபாயை செல்வமணியிடம் கொடுத்து, பத்திரப்பதிவு முடிந்ததுமே, மிச்ச தொகையை தருவதாக சொன்னார். அதுவும், இல்லாமல், செல்வமணிக்கு சொந்தமான மற்ற இடங்களில் வீடு கட்டித்தருவதாகவும் கணேசன் சொல்லியிருக்கிறார்.
இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு பத்திரப்பதிவு நடந்து முடிந்தது.. ஆனால் கணேசன் சொன்னதுபோல, பாக்கி தொகையான 5 கோடியே 80 லட்சத்தை தரவில்லையாம்.. வீட்டையும் கட்டித்தரவில்லையாம்.
என்ன காரணம்: இதைப்பற்றி கேட்டதற்கு கொரோனா காலம் வந்துவிட்டதாக காரணம் சொல்லி உள்ளார். பிறகு, கடந்த 2021-ல் சென்னை கிளை வங்கியின் காசோலையை செல்வமணியிடம் கணேசன் கொடுத்துள்ளார். ஆனால் அது திரும்ப வந்துவிட்டது. அப்போதுதான், கணேசன் தன்னை ஏமாற்றிவிட்டதாக அறிந்த செல்வமணி, ஜெயங்கொண்டம் போலீசிலும், மாவட்ட எஸ்பி ஆபீசிலும் புகார் தந்தார். ஆனால், அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
இதனிடையே, கணேசனும், அவரது சகோதரர்களும், செல்வமணியை தகாத வார்த்தைகளால் திட்டியிருக்கிறார்கள். இதனால் மனமுடைந்த செல்வமணி, போலீசிலும் நடவடிக்கை எதுவும் எடுக்காத நிலையில், நேராக கோர்ட்டுக்கே போய்விட்டார்.
மிஸ்ஸிங்: அரியலூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் கணேசன் மீது வழக்கு தொடர்ந்தார். இதற்கு பிறகுதான், , 5.80 கோடி ரூபாய் மோசடியில், அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், கொலை மிரட்டல், நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால், கணேசனை காணவில்லையாம். அவரது சகோதரர்கள் ரமேஷ், சங்கர் ஆகியோரும் மாயமாகி உள்ளதால், அவர்களை வலை வீசி தேடி வருகின்றனர்












Click it and Unblock the Notifications