இந்திய சரித்திரத்தில் முதல் 2 துயரங்கள் நிகழ்ந்த அரியலூர் மருதையாற்று ரயில் பாலம்-மறக்க முடியுமா?
அரியலூர்: இந்தியாவின் துயரமான ரயில் விபத்துகளில் ஒன்றாக ஒடிஷா பாலசோர் ரயில் விபத்து நிகழ்ந்துவிட்டது. 294 பேரை பலி கொண்டிருக்கிறது இந்த ரயில் விபத்து. நாடு விடுதலைக்குப் பின்னரான ரயில் விபத்துகளைப் பற்றி எழுதும் போதும் பேசும் போதும் அரியலூர் ரயில் விபத்து உச்சரிக்கப்படாமல் இருப்பது இல்லை.
அரியலூர் ரயில் விபத்து- அரியலூர் மருதையாற்று ரயில் பாலத்தில் நிகழ்ந்த இரு ரயில் தொடர்பான சம்பவங்கள் இந்தியாவின் வரலாற்றில் எப்போதும் துயரமான சம்பவங்களாக இருக்கும்.

இந்தியா விடுதலைக்குப் பின் நிகழ்ந்த மிகப் பெரிய ரயில் விபத்து அரியலூர் மருதையாற்று பாலத்தில்தான் நிகழ்ந்தது.
அது 1956-ம் ஆண்டு நவம்பர் 23-ந் தேதி. சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி பெருமழைக்கு இடையே எக்ஸ்பிரஸ் ரயில் பயணித்து கொண்டிருந்தது. அரியலூர்- கல்லாகம் இடையேயான மருதையாற்று பாலத்தை ரயில் எட்டியதுதான் தாமதம்.. கொட்டும் பேய்மழைக்கு நடுவே கும்மிருட்டில் இரைச்சலெடுத்து ஓடும் காட்டாற்றை விஞ்சும் மரண ஓலங்களே எங்கும்.. ஆம் மருதையாற்று பாலம் பலமிழந்து ஆற்றுக்குள் மூழ்க தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளும் அத்தனை பயணிகளுடன் அடுத்தடுத்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
விடுதலை இந்திய வரலாற்றில் மிகப் பெரிய முதலாவது ரயில் விபத்து இது. இதில் மொத்தம் 250 பயணிகள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டனர். ஆனால் கிடைத்தது என்னவோ 150 உடல்கள்தான். எஞ்சிய உடல்கள் சிதைந்து அழுகின.. எங்கே கரை ஒதுங்கின.. எந்த இடத்தில் மணலில் புதைந்தது என்பது யாரும் அறியாதது!
இந்திய வரலாற்றின் பெருந்துயரமான அந்த தருணத்தில் மத்திய அமைச்சராக இருந்த அழகேசனை நோக்கி அரியலூர் அழகேசா! ஆண்டது போதாதா? மக்கள் மாண்டது போதாதா? என கேள்வி எழுப்பிய வரலாறு அப்போதுதான் நிகழ்ந்தது.
இதன்பின்னர் 1987-ம் ஆண்டு அதே அரியலூர் மருதையாற்று பாலம் இன்னொரு வகை துயரத்தை சந்தித்தது- விடுதலை இந்திய வரலாற்றில் அதுவும் வேறுவகை முதல் துயரம்தான்! ஆம் இந்திய விடுதலைக்குப் பின் போராளி குழு ஒன்று முதன் முதலில் பயணிகள் ரயிலை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதும் இதே மருதையாற்று பாலத்தில்தான் நிகழ்ந்தது!
அண்மையில் சூரி நடித்து வெளியான விடுதலை திரைப்படத்தின் முதல் காட்சியாக இடம்பெறுமே நெஞ்சை பதற வைக்கும் ரயில் விபத்து காட்சி.. அது மருதையாற்று ரயில் பால தகர்ப்பின் எதிரொலிதான்!
இந்தியாவில் இருந்து தமிழ்நாடு தனிநாடாக- தனி சுதந்திர நாடாக வேண்டும் என்பதை இலக்காக கொண்ட பொன்பரப்பி தமிழரசன் தலைமையிலான தமிழ்நாடு விடுதலைப் படையினர் நடத்திய மருதையாற்று பால தகர்ப்பு சம்பவத்தையே விடுதலை திரைப்படம் மறைமுகமாக சுட்டிக்காட்டியது. மருதையாற்று பாலம் தகர்ப்பில் மொத்தம் 26 பேர் கொல்லப்பட்டனர்.












Click it and Unblock the Notifications