அடுத்தது அமைச்சர் சிவசங்கர் தான்.. ஜூனியர் செந்தில் பாலாஜி.. அண்ணாமலை பேச்சால் பரபரப்பு!
அரியலூர்: அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்ட நிலையில், அரியலூரில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் அண்ணாமலை பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் இடையே மோதப் போக்கு நிலவி வந்தது. இருவரும் மாறி மாறி கடுமையாக விமர்சித்துக் கொள்வது வாடிக்கையாக இருந்து வந்தது. இந்நிலையில், அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக எழுந்த புகாரில் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி, அவரை கைது செய்தது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதே முதல்வர் மு.க. ஸ்டாலின் தான் எனக் கூறினார்.
மேலும் பேசிய அண்ணாமலை, "இன்றோ நேற்றோ செந்தில்பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை. பல ஆண்டுகளாக இந்த வழக்கில் விசாரணை நடந்து வருகிறது. நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில்தான் தற்போது கூட செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.

செந்தில் பாலாஜியை ஊழல் பேர்வழி என்றும், அவரும் அவரது தம்பியும் சேர்ந்து எப்படியெல்லாம் லஞ்சம் வாங்கி கொழிக்கிறார்கள் என்பதை பற்றியும் முதல்வர் ஸ்டாலின் தான் பேசினார். செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தவரே ஸ்டாலின் தான். அப்போது அவ்வாறு கூறிவிட்டு, இப்போது நடவடிக்கை எடுத்ததும் பாஜக மீது பழிசுமத்துகிறார்" என விமர்சித்தார்.
இந்நிலையில் அரியலூர் மாவட்ட பா. ஜ. க. சார்பில் ஜெயங்கொண்டத்தில் இன்று பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அடுத்தது போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தான் எனத் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயங்கொண்டம் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, "செந்தில் பாலாஜி கைது திமுகவிற்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூனியராக யார் இருப்பார் என நான் ஆராய்ச்சி செய்து பார்த்தேன். குட்டி செந்தில் பாலாஜி யார் என்றால் இந்த மாவட்டத்தில் இருக்கும் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தான். அரியலூர் மாவட்டத்தின் திமுக செயலாளர்.
செந்தில் பாலாஜி பணம் வாங்கிக்கொண்டு வேலை கொடுப்பார். Cash for Job Scam. சிவங்கர் பணம் வாங்கிக்கொண்டு டிரான்ஸ்பர் கொடுப்பார். Cash for Transfer Scam. அடுத்த திமுக ஃபைல்ஸில் அண்ணன் சிவசங்கர் இருக்கிறார்.
சமீபத்தில் நடந்த 36 பணிமாறுதல்களுக்கு ரூ.12 கோடி பணம் வாங்கியுள்ளார். வழக்கம்போல என் மீது ஒரு வழக்கை போடுவார்கள். சிவசங்கர் என் மீது ஒரு வழக்கை எடுத்து வருவார். மான நஷ்ட வழக்கு போடுவார்கள். அதை மானம் இருப்பவர்கள் போடலாம், நீங்க எதுக்கு போடுறீங்க?
நீங்கள் யாரிடம் பணம் வாங்கி இருக்கிறீர்கள் என்று சொல்கிறேன். செந்தில் பாலாஜி 8 அடி தாண்டினால் அவரது சிஷ்யர் நான் 16 அடி தாண்டுவேன் என்று நிற்கிறார் சிவசங்கர். அவருடைய ஏஜெண்ட், லஞ்ச ஒழிப்புத்துறையால் தேடப்படும் குற்றவாளி. சிவசங்கர் வீட்டுக்குச் சென்றால் அவரது பக்கத்திலேயே அமர்ந்திருப்பார்" எனப் பேசியுள்ளார் அண்ணாமலை.












Click it and Unblock the Notifications