நாட்டை உலுக்கிய டாப் 5 ரயில் விபத்துகள்! 200 பேர் உயிரைக் குடித்த அரியலூர் விபத்து!
அரியலூர்: மேற்குவங்க ரயில் விபத்தை அடுத்து, நாட்டையே உலுக்கிய அரியலூர் ரயில் விபத்து குறித்த நினைவுகள் பேசு பொருள்ளாகியுள்ளது. ஆக, 1956 முதல் இன்றுவரை இந்தியாவை உலுக்கிய டாப் 5 ரயில் விபத்துகள் எவை? அதில் உயிரிழந்த பயணிகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.
மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தா நோக்கிச் சென்று கொண்டிருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில், கிட்டத்தட்ட 15 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதுபோன்ற மோசமான ரயில் விபத்துகள் நடப்பதைத் தடுக்க வேண்டும் எனப் பல ஆண்டுகளாக எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் மட்டும் 280 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தால் நாடே கவலையில் மூழ்கியது. பாஜக ஆட்சியில் நடைபெற்ற மிக மோசமான ரயில் விபத்து என்று இன்றுவரை இதை எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இந்த ரயில் விபத்திற்காக மத்திய அமைச்சரவையில் யாரும் பதவி விலகவில்லை. ஆனால், இந்தியாவையே உலுக்கிய ஒரு ரயில் விபத்து ஒன்று பல ஆண்டுகள் முன்பு தமிழ்நாட்டில் நடந்தது. அதற்காக ரயில்வே அமைச்சர் பதவியே விலகினார்.
இந்தச் சம்பவம் பலருக்கும் தெரியாத விசயம். 1956இல் அரியலூரில் நவம்பர் மாதம் 23 ஆம் தேதி ஒரு ரயில் விபத்து நடந்தது. தடம் புரண்டு மருதையாற்றில் விழுந்ததால் 150க்கும் மேற்பட்ட பயணிகள் மரணத்தைத் தழுவினர். அதுவரை இந்தியா இப்படி ஒரு ரயில் விபத்தை சந்திக்கவே இல்லை என்றுகூட சொல்லலாம். இதன் பின்னர் இரண்டரை மாதங்கள் கழித்து மஹ்பூப் நகரில் இதே மாதிரி ஒரு ரயில் விபத்து நடைபெற்றது.
1956 ஆம் ஆண்டு பெய்த கனமழையால் அரியலூர் ஆற்றில் குறுக்கே கட்டப்பட்ட ரயில் பாலத்தை தாண்டி வெள்ளநீர் கரைபுரண்டோடியது. அப்போது பாலம் இடிந்து விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டது. கிட்டத்தட்ட சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு 800 பயணிகளுடன் சென்ற இந்த ரயில் ஆற்றில் கவிழ்ந்தது. அப்போது 13 பெட்டிகளைக் கொண்ட ரயில் வெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்தது. அதில் 7 பெட்டிகள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியன.
இந்த விபத்தில் கிட்டத்தட்ட 150 முதல் 250 பேர் வரை உயிரிழந்தனர் என்று தகவல்கள் சொல்கின்றன. 200 பேர் வரை இடிபாடுகளில் சிக்கிப் புதைந்து போயினர். 150 உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டன. ஆகவே உயிரிழந்தோர் எண்ணிக்கை சரியாக கூறப்படவில்லை. மேலும் 110 பேர் காயமடைந்ததாக சொல்லப்பட்டது. அப்போது இந்திய ரயில்வே மத்திய அமைச்சராக லால் பகதூர் சாஸ்திரி இருந்தார். நாடு முழுவதும் எழுந்த கண்டனக் குரலை ஏற்று அவர் பதவி விலகினார். அது மாபெரும் அரசியல் நெருக்கடியாக அன்று கூறப்பட்டது.
இந்த ரயில் விபத்தை வைத்து திமுக தமிழ்நாட்டில் காங்கிரஸ் அரசுக்கு பல நெருக்கடியை கொடுத்தது. பல ஆண்டுகள் ஆன பிறகும் கூட திமுக இதைப் பற்றி பல மேடைகளில் பேசி வந்தது. அதன்பின்னர் தமிழ்நாட்டில் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருச்செந்தூர் ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்குச் செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. அதில் சுமார் 957 பயணிகள் வரை பயணித்தனர். கனமழையால் ரயில் தண்டவாளங்கள் அடித்து செல்லப்பட்ட நிலையில் ஸ்ரீவைகுண்டத்தில் பயணிகள் தங்க வைக்கப்பட்டனர். ஒரு கர்ப்பிணிப் பெண் சிக்கித் தவித்து வந்த நிலையில், அவர் பல கட்ட முயற்சிக்களுக்குப் பின்னர் மீட்கப்பட்டார். அது நாடு முழுவதும் பெரிய செய்தியானது.
நாடு முழுவதும் நடைபெற்ற 5 கொடிய ரயில் விபத்துகள் பட்டியல் இதோ:
#2023 ஆம் ஆண்டு ஒடிசா மாநிலம் பாலசோரில் மூன்று ரயில்கள் மோதிய விபத்தில் 300 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 1,000 பேர் காயமடைந்தனர்.
#2016ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் உள்ள கான்பூர் அருகே இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. அதில் குறைந்தது 150 பயணிகள் பலியாகினர்.
#2010 ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் சரக்கு ரயிலில் மோதியதால், 146 பேர் கொல்லப்பட்டனர்.
#2002 ஆம் ஆண்டு கொல்கத்தா- புது டெல்லி ராஜதானி ரயில் தாபி ஆற்றில் மூழ்கியதில் 120 பேர் கொல்லப்பட்டனர்.
#1999 ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்டதில் 285 பேர் உயிரிழந்தனர்.
#1998 ஆம் ஆண்டு பஞ்சாபில் சீல்டா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது. அதில் சுமார் 210 பேர் இறந்தனர்.
#1995 ஆம் ஆண்டு ஆக்ரா அருகே பெரோசாபாத்தில் புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் மீது காளிந்தி எக்ஸ்பிரஸ் மோதியதில் 300க்கும் மேற்பட்டோர் இறந்து போனார்கள்.












Click it and Unblock the Notifications