காதலி சென்ற அரசு பஸ்.. நிறுத்துவதற்காக செய்த செயல்.. கம்பி எண்ணும் விசிக பிரமுகர் மகன்
அரியலூர்: அரியலூரில் காதலி சென்ற அரசு பஸ்சை நிறுத்த விரும்பிய விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் மகன், அதற்காக செய்த செயலால் தற்போது ஜெயிலில் கம்பி எண்ணி வருகிறார்.
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள நரசிங்க பாளையம் காலனி தெருவை சேர்ந்த அருமைராஜ் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை அமைப்பாளராக இருக்கிறார். இவரது மகன் பிரேம்குமாருக்கு 21 வயது ஆகிறது. இவர் டிப்ளமோ மெக்கானிக் படித்து முடித்துள்ளார்.

டிப்ளமோ என்ஜினியரான பிரேம்குமார் தனது பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு காதலியுடன் பிரேம்குமாருக்கு தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண், பிரேம்குமாரிடம் கடந்த சில நாட்களாக பேசாமல் இருந்ததுடன், அவரது போனையும் எடுக்கவில்லையாம்.
இதனிடையே நேற்று காலை சுமார் 7.30 மணியளவில் பிரேம்குமாரின் காதலி, தனது ஊருக்கு செல்வதற்காக நரசிங்கபாளையம் காலனி பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தாராம். பின்னர் காட்டுமன்னார்குடியில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் அந்த பெண் ஏறினாராம். பஸ் கிளம்பிய நிலையில் அங்கு வந்த பிரேம்குமார் தனது காதலி சென்ற அரசு பேருந்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று நினைத்து பஸ்ஸை நோக்கி பெட்ரோல் குண்டு வீசினார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அரசு பேருந்து டிரைவர் திடீரென பஸ்சை நிறுத்தினார். இதனால் அந்த பெட்ரோல் குண்டு சாலையில் விழுந்து தீப்பிடித்தது. இதையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் பீதியில் அங்கிருந்து வெளியே ஓடி வந்து தப்பித்தார்கள். இந்த சம்பவம் குறித்து பஸ் டிரைவர் ஆரோக்கியசாமி போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து பெட்ரோல் குண்டு வீசிய பிரேம்குமாரை போலீசார் கைது செய்தனர். அரியலூரில் காதலி சென்ற அரசு பஸ்சை நிறுத்த விரும்பிய காதலன் அதற்காக பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications