அரியலூரில் கணவரின் மர்ம உறுப்பை அறுத்த மனைவி.. மொத்த ஊரையும் நடுங்க வைத்த வாக்குமூலம்
அரியலூர்: அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே விவசாயி சின்னப்பா என்பவர் தினமும் மது குடித்துவிட்டு வருவது வாடிக்கையாம். அப்படி மது அருந்திவிட்டு வரும் அவர், தனது மனைவி பச்சையம்மாவிடம் பிரச்சனை செய்வதும் வாடிக்கையாம். தினமும் இப்படி குடித்துவிட்டு வந்த கணவரை, அவரது மனைவி பச்சையம்மாள் என்ன செய்தார் தெரியுமா? அதை கேட்டு மொத்த ஊரும் நடுங்கி போயிருக்கிறது.
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள ஆனந்தவாடி கிராமத்தை சேர்ந்த 45 வயதாகும் சின்னப்பா விவசாயி ஆவார். இவரது மனைவி பச்சையம்மாளுக்கு 43 வயது ஆகிறது இவர்களுக்கு 23 வயதில் பாலமுருகன் என்ற மகனும், 21 வயதில் பானுப்பிரியா என்ற மகளும் உள்ளனர். இதில் பாலமுருகன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். பானுப்பிரியாவை அரியலூர் அருகே உள்ள தாமரைக்குளம் கிராமத்தில் திருமணம் செய்து கொடுத்துவிட்டனர்

விவசாயி சின்னப்பா தினமும் மது குடித்துவிட்டு வந்து பச்சையம்மாளை கொடுமைப்படுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பானுப்பிரியா தனது தாய் வீட்டிற்கு வந்தாராம். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த சின்னப்பா, பச்சையம்மாள், பானுப்பிரியாவிடம் பிரச்சினை செய்திருக்கிறாராம். இதையடுத்து அவர்கள் வீட்டில் இருந்து வெளியே சென்று அருகே உள்ள வீட்டில் தங்கியிருக்கிறார்.
நேற்று காலை சின்னப்பா கைகள் மற்றும் கால்களின் நரம்புகள் மற்றும் மர்ம உறுப்பு அறுக்கப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்திருக்கிறார். இதையடுத்து சின்னப்பா கை, கால்கள் மற்றும் மர்ம உறுப்பை அறுத்து தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்களிடம் பச்சையம்மாள் கூறியிருக்கிறார் பின்னர் சின்னப்பாவின் உடலை அடக்கம் செய்ய அவரது உறவினர்கள் ஏற்பாடு செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்றனர். பின்னர் பச்சையம்மாளை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். இதில் சின்னப்பா கொடூரமாக கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. விசாரணையில் பச்சையம்மாள் கூறுகையில், "என்னுடைய கணவர் சின்னப்பபா மதுபோதையில் அடிக்கடி என்னை தொந்தரவு செய்து வந்தார். அதேபோல் நேற்று முன்தினம் இரவு எனது வீட்டிற்கு மகள் வந்திருந்த நிலையிலும், எனது கணவர் தகாத வார்த்தைகளால் பேசி டார்ச்சர் செய்தார். அவருக்கு பயந்து 2 பேரும் பக்கத்து வீடுகளில் தஞ்சம் அடைந்தோம். இதனிடையே அவருடைய செயலால் ஆத்திரமடைந்த நான் அதிகாலை 3 மணியளவில் எனது வீட்டிற்கு சென்றேன்.
அப்போது அங்கிருந்த இரும்பு குழாயால் எனது கணவரின் தலையில் சரமாரியாக தாக்கினேன். இதில் அவர் மயங்கி விழுந்தார். அவர் பிழைத்து கொண்டால் என்னை கொன்று விடுவார் என்ற அச்சத்தில், வீட்டில் கறி வெட்டுவதற்கு வைத்திருந்த கத்தியால் அவரது கைகள், கால்களை அறுத்தேன். அப்போதும் ஆத்திரம் தீராததால் மர்ம உறுப்பை அறுத்து வீசி கொலை செய்தேன்" இவ்வாறு பச்சையம்மாள் கூறியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பச்சையம்மாளை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குடிபோதையில் தொடர்ந்து கொடுமை செய்த கணவரின் மர்ம உறுப்பை அறுத்து மனைவியே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications