இது லிஸ்ட்லயே இல்லையே.. தேர்தலில் பிரியங்கா காந்தி களமிறங்கப்போகும் தொகுதிகள்.. 2 ரெடி!
பெங்களூர்: அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி தனது பாட்டியான முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை போல் கர்நாடகாவில் இருந்து போட்டியிட உள்ளதாகவும், அவருக்காக அங்கு 2 தொகுதிகள் தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் 10 மாதங்கள் மட்டுமே தேர்தலுக்கு இருக்கும் நிலையில் பாஜக, காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன. 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தொடர்ந்து பாஜக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை பிடித்துள்ளது.

இதனால் வரும் தேர்தலில் வென்று ஹாட்ரிக் சாதனை படைக்கும் முனைப்பில் உள்ளது. அதேவேளையில் கடந்த 10 ஆண்டுகளில் பெரிய அளவில் சரிவை சந்தித்த காங்கிரஸ் கட்சியும் தன்னை நிரூபித்து காட்ட வேண்டிய கட்டத்தில் உள்ளது. இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தான் பாஜக, காங்கிரஸ் கட்சி தலைவர்களின் பார்வைகள் அனைத்தும் தென்மாநிலங்களை நோக்கி திரும்பி உள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர தமிழ்நாட்டில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடலாம் என்ற செய்திகள் பரவி வருகிறது. அதேபோல் ராகுல் காந்தியின் 2 ஆண்டு சிறை தண்டனை ரத்து செய்யப்படும் பட்சத்தில் அவர் மீண்டும் கேரளா வயநாடு தொகுதியில் போட்டியிடலாம் என சொல்லப்படுகிறது.
அதேபோல் ராகுலை போல் காங்கிரஸின் இன்னொரு முகமாக உள்ள பிரியங்கா காந்தியும் தென்மாநிலத்தில் இருந்து தான் போட்டியிடலாம் என்ற தகவல்கள் பரவி வருகிறது. பிரியங்கா காந்தி தனது பாட்டியான மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை போல் கர்நாடகாவில் இருந்து களமிறங்கலாம் என கூறப்படுகிறது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. இதில் பிரியங்கா காந்தியின் பங்கு முக்கியமானதாகும். இதனால் அங்கிருந்து அவர் தேர்தல் அரசியலில் கால்பதிக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் பிரியங்கா காந்திக்காக 2 தொகுதிகள் அங்கு தயாராகி வருகிறதாம்.

இதில் முதல் தொகுதி எதுவென்றால் உடுப்பி-சிக்கமகளூர். இங்கு தற்போது மத்திய அமைச்சராக உள்ள ஷோபா எம்பியாக உள்ளார். இந்த தொகுதியில் பிரியங்கா காந்தியின் பாட்டி இந்திரா காந்தியும் போட்டியிட்டு எம்பியாகி உள்ளார். இந்தியாவில் எமர்ஜென்சி நடைமுறைப்படுத்திய நிலையில் இந்திரா காந்தி மீது மக்களுக்கு கோபம் இருந்தது. இதையடுத்து எமர்ஜென்சிக்கு பிறகு 1977ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் உத்த பிரதேசம் ரேபரேலியில் இந்திரா காந்தி தோற்றார்.
இதனால் இந்திரா காந்தியின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியான நிலையில் 1978ல் சிக்கமகளூர் தொகுதிக்கு இடைத்தேர்தலில் இந்திரா காந்தி போட்டியிட்டு 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் அரசியலில் மறுவாழ்வு பெற்றார். மேலும் நடந்து முடிந்த கர்நாடகா சட்டசபை தேர்தலில் சிக்கமகளூர் மாவட்டத்தில் பிரியங்கா காந்தி தீவிர பிரசாரம் செய்தார்.
தனது பாட்டி இந்திரா காந்திக்கு மறுவாழ்வு கொடுத்த மக்களான உங்களை நான் மறக்கவே மாட்டேன் என உருக்கமாக பேசினார். இதனால் பாஜக கோட்டையாக இருந்த சிக்கமகளூர் மாவட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். சிட்டிங் எம்எம்எல்ஏவாக இருந்த தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி ரவியே சிக்கமகளூர் தொகுதியில் தோல்வியடைந்தார். இதனால் நாடாளுமன்ற தேர்தலில் பிரியங்கா காந்தி உடுப்பி - சிக்கமகளூர் தொகுதியில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.
இல்லாவிட்டால் கர்நாடகாவில் உள்ள மைசூர்-குடகு நாடாளுமன்ற தொகுதியில் இருந்து பிரியங்கா காந்தி போட்டியிடலாம் என கூறப்படுகிறது. இந்த தொகுதி எம்பியாக தற்போது பிரதாப் சிம்ஹா உள்ளார். இவர் பாஜகவை சேர்ந்தவர். மேலும் குடகு-மைசூர் நாடாளுமன்ற தொகுதி என்பது கேரளா-தமிழ்நாடு எல்லையில் அமைந்துள்ளது. இதனால் இந்த தொகுதியில் போட்டியிட்டால் அது கேரளா, தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் கட்சிக்கு வலு சேர்க்க வாய்ப்புள்ளது.
மேலும் பொதுவாக குடகு மாவட்டம் என்பது பாஜகவின் கோட்டையாக இருக்கும். ஆனால் இந்த முறை நடந்த தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் அங்கு தோற்றனர். இதன்மூலம் காங்கிரஸ் கட்சிக்கு அந்த மாவட்ட மக்கள் ஆதரவு அளிக்க தொடங்கி உள்ளனர். மேலும் மைசூர் மாவட்டத்தில் காங்கிரஸ் நல்ல செல்வாக்குடன் உள்ளது. அதோடு அது முதல்வர் சித்தராமையாவின் சொந்த மாவட்டமாகவும் இருக்கிறது. இதனால் இங்கும் பிரியங்கா காந்தியை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கர்நாடகாவில் உடுப்பி- சிக்கமகளூர், மைசூர்-குடகு என 2 நாடாளுமன்ற தொகுதிகள் பிரியங்கா காந்திக்காக தயாராகி வருகிறது. இருப்பினும் பிரியங்கா காந்தி தனது பாட்டி போட்டியிட்ட உடுப்பி-சிக்கமகளூர் தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது நடக்கும் பட்சத்தில் மைசூர்-குடகு நாடாளுமன்ற தொகுதியில் முதல்வர் சித்தராமையாவின் மகனும், முன்னாள் எம்எல்ஏவுமான யதீந்திரா காங்கிரஸ் சார்பில் போட்டியிடலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications