வெந்துப்போன கால்கள்.. ராகுல் பிரதமராக வேண்டும்..செருப்பு அணியாமல் யாத்திரை செல்லும் இளைஞர்-உருக்கம்
பெங்களூர்: கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு காஷ்மீர் வரை ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு வரும் நிலையில் அவருடன் ஏராளமானவர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் ராகுல் காந்தி பிரதமராகும் வரை செருப்பு அணியமாட்டேன் எனக்கூறி இளைஞர் ஒருவர் காஷ்மீர் நோக்கி புறப்பட்டுள்ளார். கால்கள் வெந்துப்போன நிலையிலும் கூட அவர் உற்சாகமாக ராகுல் காந்தியுடன் நடந்து செல்கிறார்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. புதிய தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையே கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை எனும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை ராகுல்காந்தி துவங்கி உள்ளார்.
விசாரணை கமிஷன்களின் அதிகாரம் என்ன.. அறிக்கைகளால் பலன் கிடைக்குமா.. சட்ட ரீதியான முழு அலசல்
கர்நாடகாவில் யாத்திரை
கன்னியாகுமரில் இருந்து காஷ்மீர் வரை 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 150 நாட்கள் நடைபெறுகிறது. சுமார் 3,500 கிலோமீட்டர் தொலைவுக்கு ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளார். கடந்த 7 ம் தேதி கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபத்தில் துவங்கிய இந்த பாத யாத்திரை கேரளாவை கடந்து தற்போது கர்நாடகத்தை தாண்டி ஆந்திராவை அடைந்துள்ளது. இந்த யாத்திரை வெற்றிக்கரமாக 1000 கிலோமீட்டரை கடந்துள்ளது.
காங்கிரஸ் உற்சாகம்
கர்நாடகாவில் நடந்த பாதயாத்திரையில் ராகுல் காந்தியுடன், சோனியா காந்தி இணைந்தார். மேலும் சமூக ஆர்வலர்கள் உள்பட ஏராளமானவர்கள் கைகோர்த்தனர். ராகுல் காந்திக்கு சிறுவர் சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை பலரும் பூ கொடுத்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது இதுதொடர்பான வீடியோக்கள், படங்கள் வெளியாகி இணையதளத்தை ஆக்கிரமித்து விடுகின்றன. இது காங்கிரஸ் கட்சியினரை உற்சாகமடைய செய்துள்ளது.
தீவிர விசுவாசி
இந்நிலையில் தான் நடைப்பயணத்தில் பங்கேற்றுள்ள ராகுல் காந்தியின் தீவிர விசுவாசி ஒருவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். ராகுல் காந்தியின் படம் பொறிக்கப்பட்ட ஆடை, தலையில் காவி நிற தலைப்பாகை, கையில் பெரிய சைஸ் தேசியக்கொடியடன் உற்சாகமாக ஒருவர் கன்னியாகுமரியில் இருந்து ராகுல் காந்தியுடன் நடைப்பயணம் செய்து வருகிறார். இவர் தான் தற்போது பேசும் பொருளாகி உள்ளது.
28 வயது இளைஞர்
இவரது பெயர் பண்டித் தினேஷ் சர்மா. வயது வெறும் 28 தான். வழக்கறிஞர் படிப்பை முடித்துள்ள இவர் ஹரியானா காக்ரூட் கிராமத்தை சேர்ந்தவர். ராகுல் காந்தியின் தீவிர விசுவாசி. ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி தொண்டர்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் பாரத் ஜோடோ யாத்திரையை துவங்குவதை அறிந்த உடனே தினேஷ் சர்மா மிகுந்த ஆர்வமடைந்தார். இந்த யாத்திரையில் தமிழ்நாடு கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ராகுல் காந்தியுடன் நடைப்பயணம் செய்ய முடிவு செய்தார். அதன்படி அவர் தற்போது ராகுல் காந்தியுடன் நடைப்பயணம் செய்து வருகிறார். இதில் என்ன சிறப்பு என்று தானே கேட்கிறீர்கள்?. ஆம் சிறப்பு ஒன்று உள்ளது.
செருப்பு அணியாமல்..
அதாவது 12 ஆண்டுகளாக ராகுல் காந்தியின் தீவிர பற்றாளராக உள்ள தினேஷ் சர்மா யாத்திரையில் செருப்பு அணியாமல் பங்கேற்றுள்ளார். செருப்பு அணியாமலேயே கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு காஷ்மீர் வரை நடைப்பயணம் துவக்கி உள்ளார். மேலும் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்று விரும்பும் தினேஷ் சர்மா நூதன முடிவு ஒன்றையும் 12 ஆண்டுக்கு முன்பே எடுத்துள்ளார். அதாவது ராகுல் காந்தி பிரதமராகும் வரை காலில் செருப்பு அணியமாட்டேன் என்று உறுதிமொழி எடுத்து அதனை தற்போது வரை தொடர்ந்து பின்பற்றி வருகிறார். அதாவது கடந்த 12 ஆண்டுகளாக அவர் செருப்பு அணியாமல் உள்ளார்.
வெந்துப்போன கால்கள்
தற்போதும் அதன்படியே அவர் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றுள்ளார். இருப்பினும் பாரத் ஜோடோ யாத்திரையில் அவர் தொடர்ந்து நடப்பதால் கால்கள் வெந்துபோய் உள்ளன. உள்ளங்கால்களில் கொப்பளங்கள் வந்துள்ளன. இருப்பினும் தினேஷ் சர்மா அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து யாத்திரையில் ராகுல் காந்தியுடன் உற்சாகமாக பங்கேற்று வருகிறது.
பிரதமராகும் வரை செருப்பு இல்லை
இதுபற்றி தினேஷ் சர்மாவிடம் கேட்டபோது, ‛‛கடந்த 12 ஆண்டுகளாக ராகுல் காந்தியின் விசுவாசியாக உள்ளேன். ராகுல் காந்தியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறேன். நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் பாரத் ஜோடோ யாத்திரையில் நான் பங்கேற்றுள்ளேன். ராகுல் காந்தி பிரதமராகும் வரை நான் செருப்பு அணியமாட்டேன்'' என்றார்.
நிச்சயம் பிரதமாவார்
இந்த வேளையில் ‛‛ராகுல் காந்தி பிரதமராகும் நம்பிக்கை உள்ளதா?'' என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு தினேஷ் சர்மா, ‛‛நிச்சயமாக, ராகுல் காந்தி உறுதியாக பிரதமர் பதவியை அடைவார். இதில் எனக்கு நம்பிக்கை உள்ளது'' என சிரித்தமுகத்துடன் கூறிவிட்டு உற்சாகமாக பாரத் ஜோடோ யாத்திரையில் நடந்து சென்றார்.