மன்னிப்பு கோரினார் தவெக அமைச்சர் கீர்த்தனா.. அறியாமல் செய்த தவறை அரசியலாக்க வேண்டாம் என உருக்கம்!
சென்னை: "மாற்றுத் திறனாளிகள் குறித்து மரியாதைக் குறைவாக பேச வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் இல்லை. மாற்றுத்திறனாளி தாய்க்கு பிறந்த மகள்தான் நான். அந்த வலியும் வேதனையும் எனக்கும் உள்ளது" என்று தவெக அமைச்சர் கீர்த்தனா தான் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 107 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக இருக்கும் தவெகவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்காததால், திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக தவெக தலைவர் ச. ஜோசப் விஜய், கடந்த 10ஆம் தேதி பதவி ஏற்றார். அவருடன் சேர்ந்து சிவகாசி எம்.எல்.ஏ. கீர்த்தனா உட்பட 9 பேர் அமைச்சர்களாகப் பதவி ஏற்றனர்.

எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சிவகாசி சட்டமன்ற உறுப்பினரும், தவெக அமைச்சருமான கீர்த்தனா, மாற்றுத் திறனாளிகள் குறித்துப் பயன்படுத்திய வார்த்தை பெரும் கண்டனத்துக்கு உள்ளானது. இந்நிலையில், அமைச்சர் கீர்த்தனா மன்னிப்புக் கோரியுள்ளார்.
இது குறித்து அமைச்சர் கீர்த்தனா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "அண்மையில் நான் தெரிவித்த கருத்துகள் சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருப்பதை அறிகிறேன். மாற்றுத் திறனாளிகள் குறித்து மரியாதைக்குறைவாக பேச வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் இல்லை. மாற்றுத்திறனாளி தாய்க்கு பிறந்த மகள் தான் நான். அந்த வலியும் வேதனையும் எனக்கும் உள்ளது.
அறியாமல் செய்த தவறை அரசியலாக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய வார்த்தைகள் யாருடைய மனதையும் புண்படுத்தியிருந்தால், அதற்காக மனமார்ந்த வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications